நிலக்கரி தட்டுப்பாடு இல்லை- அமைச்சர்!

வியாழன், 22 மே 2008 (14:34 IST)
நிலக்கரி தட்டுப்பாடு ஏதும் இல்லை என்று மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் சந்தோஷ் பர்கோடியா தெரிவித்தார்.

அனல் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு குறைந்து வருவதால், மின் உற்பத்தி பாதிக்கப்படும் என்ற தகவல் சென்ற வாரம் வெளியானது.

இந்த நிலையில் நிலக்கரி தட்டுப்பாடு குறித்து நேற்று மும்பையில், மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் சந்தோஷ் பர்கோடியா செய்தியாளர்களிடம் பேசுகையில், “அனல் மின் நிலையங்கள் தேவையான அளவு நிலக்கரியை இருப்பு வைத்துக் கொள்வதில்லை. இவை குறைந்தபட்சம் 21 நாட்களுக்கு தேவையான நிலக்கரியை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். 27 அனல் மின் உற்பத்தி நிறுவனங்கள் ஏழு நாட்களுக்கு தேவையான நிலக்கரியை மட்டுமே இருப்பில் வைத்துக் கொள்கின்ற” என்று கூறினார்.

நிலக்கரி தட்டுப்பாடு நிலவுவதால்தான் புதிய அனல் மின் நிலையங்களின் திட்டங்களை தொடங்குவதில் தாமதம் ஏற்படுகின்றன என்று மத்திய மின் அமைச்சகம் கூறியிருந்தது.

இந்த குற்றச்சாட்டு பற்றி அமைச்சர் சந்தோஷ் பர்கோடியா பதிலளிக்கையில், சென்ற நிதி ஆண்டில் புதிதாக 1 லட்சம் மெகா வாட் மின் உற்பத்தி திறனுள்ள அனல் மின் நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் 23 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான அனல் மின் நிலையங்களே அமைக்கப்பட்டுள்ளன.

மத்திய மின் அமைச்சகம் 400 மில்லியன் டன் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுவதாக கூறியுள்ளது. ஆனால் எங்களிடம் 400 மில்லியன் டன் நிலக்கரி இருப்பில் உள்ளது. இந்த நிலையிலநிலக்கரி பற்றாக்குறை உள்ளது என்று எப்படி கூற முடியும்.

நிலக்கரி தேவையான அளவு கிடைக்கின்றது. ஆனால் யாரும் இருப்பு வைக்க விரும்புவதில்லை. அதே நேரத்தில் அனல் மின் நிலையங்கள் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படுவதாக கூறுகின்றன.

சென்ற வருடம் 405 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டது. இந்த வருடம் 425 மில்லியன் டன்னாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் வருடத்திற்கு 450 மில்லியன் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. இதில் 50 மில்லியன் டன் உயர் வெப்ப நிலை கொண்ட உலை கரியாகும். இது உள்நாட்டில் குறைந்த அளவே கிடைக்கின்றது. மீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

சென்ற வருடம் நிலக்கரி விலை 35 விழுக்காடு அதிகரித்து, ஒரு டன் ரூ.2,551 ஆக உயர்ந்தது. இந்த வருடம் நிலக்கரி விலை உயர்த்தப்படாது என்று அமைச்சர் சந்தோஷ் பர்கோடியா தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்