இன்சாட்-4சிஆர் செப்டம்பர் 2 ஏவப்படும்!

Webdunia

புதன், 29 ஆகஸ்ட் 2007 (13:42 IST)
தகவல் தொடர்பு வசதிகளை விரிவுபடுத்த 12 கூ பேண்ட் டிரான்ஸ்பாண்டர்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள இன்சாட்-4சிஆர் எனும் புதிய செயற்கைக்கோள் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது!

புவி மையத்துடன் இணைந்த சுழற்சிப் பாதையில் செயற்கைக்கோள்களைச் செலுத்தும் ஜி.எஸ்.எல்.வி.-எஃப்04 விண்கலத்தின் மூலம் செப்டம்பர் 1 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படயிருந்த இன்சாட்-4சிஆர் செயற்கைக்கோள் தற்பொழுது நிலவிவரும் வானிலையின் காரணமாக ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டு செப்டம்பர் 2 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

2,130 கி.கி. எடை கொண்ட 12 சக்திவாய்ந்த கூ பேண்ட் டிரான்ஸ்பாண்டர்களுடன் விண்ணில் செலுத்தப்படவுள்ள இன்சாட்-4சிஆர், புவியை நோக்கிய சுழற்சிப் பாதையில் ஏற்கனவே சுழன்றுக் கொண்டிருக்கும் இன்சாட்-3சி, கல்பனா-1, எஜூசாட் ஆகியவற்றைப் போலவே 24 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையை மையமாகக் கொண்ட பாதையில் செலுத்தப்படும்.

புவியில் இருந்து சுழற்சிப் பாதையில் அதிகபட்ச தூரத்தில் செலுத்தப்படவுள்ள இன்சாட்-4சிஆர், அதில் பொருத்தப்படும் 440 நியூட்டன் திரவ உந்து இயந்திரத்தின் மூலம் இயக்கப்பட்டு புவிக்கு அருகே வரக்கூடிய சுழற்சிப் பாதைக்கு செலுத்தப்பட்டு நிலை நிறுத்தப்படும்.

இந்த செயற்கைக்கோள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இயங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்