நடிகர் சஞ்சய் தத்திற்கு 6 ஆண்டு கடுங்காவல் சிறை - தீர்ப்பு!

Webdunia

செவ்வாய், 31 ஜூலை 2007 (14:00 IST)
1993 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாற்றப்பட்டு, ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் சட்டத்திற்குப் புறம்பாக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்ட ஹிந்தி திரைப்பட நடிகர் சஞ்சய் தத்திற்கு மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் 6 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது!

மும்பை தொடர் குண்டு வெடிப்பில் குற்றம் சாற்றப்பட்டிருந்தாலும், அந்தக் குற்றங்களில் சஞ்சய் தத் ஈடுபடவில்லை என்று அவரை விடுவித்த தடா நீதிமன்றம், அனுமதியின்றி ஏ.கே. 47 உள்ளிட்ட துப்பாக்கிகளையும், ஆயுதங்களையும் தனது வீட்டில் சஞ்சய் தத் வைத்திருந்தது ஆயுதங்கள் சட்டப்படி குற்றமே என்று தீர்ப்பளித்திருந்தது.

அக்குற்றத்திற்கான தண்டனையை மும்பை தடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.டி. கோடே அறிவித்தார். சஞ்சய் தத்திற்கு 6 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிப்பதாக நீதிபதி கோடே தீர்ப்பு கூறியுள்ளார்.

சஞ்சய் தத் சட்டத்திற்குப் புறம்பாக ஆயுதங்களை வைத்திருந்தது மட்டுமின்றி, அந்தக் குற்றத்தைச் செய்யும்படி மற்றவர்களையும் தூண்டியுள்ளார். அதுமட்டுமின்றி, தன்னிடம் இருந்த ஆயுதங்களை அழித்திவிடும் படி முல்லா வாலாவை வற்புறுத்தியுள்ளார் என்று தனது தீர்ப்பில் நீதிபதி கோடே கூறியுள்ளார்.

சஞ்சய் தத்தின் உதவியாளராக இருந்த ருசி முல்லா என்பவரை நன்னடத்தை விடுதலை செய்வதாக நீதிபதி கோடே கூறினார்.

ருசி முல்லா ஒரு லட்சம் ரூபாய் செலுத்தி நன்னடத்தை விடுதலை பெறலாம் என்றும், அவர் ஓராண்டு காலத்திற்கு கண்காணிக்கப்படுவார் என்றும் நீதிபதி கோடே கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்