குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிக்க 3ம் அணி முடிவு!

Webdunia

சனி, 14 ஜூலை 2007 (19:59 IST)
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களையும் ஆதரிப்பதில்லை என்றும், தேர்தலில் வாக்களிப்பதில்லை என்றும் சமாஜ்வாடி, தெலுங்கு தேசம், அஇஅதிமுக உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட ஐக்கிய தேச முற்போக்குக் கூட்டணி அறிவித்துள்ளது!

தலைநகர் டெல்லியில் ஐக்கிய தேச முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா, ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியோ அல்லது தேச ஜனநாயகக் கூட்டணியோ ஆதரிக்கும் எந்த வேட்பாளரையும் நாங்கள் ஆதரிக்கமாட்டோம். எங்கள் முடிவில் மாற்றம் ஏதுமில்லை. ஐக்கிய தேச முற்போக்குக் கூட்டணி குடியரசுத் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிக்கும் என்று கூறினார்.

ஆனால், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் 3ம் அணி தங்களது வேட்பாளரை நிறுத்தும் என்று முடிவு செய்திருப்பதாக ஜெயலலிதா கூறினார்.

3ம் அணியின் இம்முடிவால் குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவில் மாற்றம் ஏதும் ஏற்படாது என்றாலும், பா.ஜ.க. தலைமையிலான தேச ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் பைரோன் சிங் ஷெகாவத்திற்கு வாக்குகள் பெருமளவிற்குக் குறையும்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இடதுசாரிகள் நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு தருவீர்களா என்று கேட்டதற்கு, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசிற்கு அளித்துவரும் ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக்கொண்டால் அவர்களுடைய வேட்பாளரை ஆதரிப்போம் என்று ஜெயலலிதா கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்