கச்சா எண்ணெய் விலையேற்றம் நியாயமற்றது: சவுதி அரேபியா!
செவ்வாய், 10 ஜூன் 2008 (17:01 IST)
உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள கச்சா எண்ணெய் விலையேற்றம் நியாயமற்றது என்று உலக கச்சா உற்பத்தியில் முதலிடத்திலுள்ள செளதி அரேபியா கூறியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு பற்றி விவாதிப்பதற்காக எண்ணெய் உற்பத்தி நாடுகளும், பயன்படுத்தும் நாடுகளும் உடனடியாகக் கூட வேண்டும் என்றும் செளதி அரேபியா கோரிக்கை விடுத்துள்ளது.
கூடுதலான எரிபொருள் வினியோகத்தின் மூலம் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் பணியில், எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு (ஓபெக்) உடன் மற்ற பெரும் உற்பத்தியாளர்களும் இணைய வேண்டும் என்றும் செளதி அரேபியா வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச எண்ணெய் மாநாடு நடத்த வேண்டும் என்ற முடிவு மன்னர் அப்துல்லாவின் தலைமையில் ஜெடாவில் நடந்த சவுதி அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
எரிபொருள் வினியோகத்தை அதிகரிக்கும் பணியில் எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு (ஓபெக்), மற்ற பெரும் உற்பத்தியாளர்கள் ஆகியோருடன் செளதி அரேபியா இணைந்து செயல்படும் என்று அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.