சிமென்ட் விலை அதிகரிக்காது!

செவ்வாய், 18 டிசம்பர் 2007 (14:05 IST)
சிமெண்ட் விலை அடுத்த ஆறு மாதத்திற்கு அதிகரிக்காது என்று சிமெண்ட் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிமெண்ட் தேவையான அளவு உற்பத்தி செய்யப்படுகிறது. சில நேரங்களில் சிறிய அளவு விலை உயரலாம். அதிகளவு சிமெண்ட் விலை அதிகரிக்காது என்று சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹெச்.எம்.பங்கூர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், சிமெண்ட் விலை கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரையில் மூன்று விழுக்காடே அதிகரித்துள்ளது. இது பணவீக்க அளவை விட குறைவு.
சிமெண்ட் உற்பத்தி செய்வதற்கான இடு பொருட்கள் விலை அதிகரித்துள்ளது. போக்குவரத்து செலவும் அதிகரித்துள்ளது. இவற்றை ஈடுகட்ட சிமெண்ட் விலையை உயர்த்துவது சரியான தீர்வாக இருக்காது என எல்லா சிமெண்ட் உற்பத்தியாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இதற்கு பதிலாக உற்பத்தி செலவை குறைப்பது முக்கியமானது என்று கருதுகின்றோம். சிமெண்ட் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. நமக்கு தேவையான சிமெண்ட் உற்பத்தி செய்யும் திறன், இங்குள்ள சிமெண்ட் ஆலைகளுக்கு உள்ளது என்று கூறினார்.

சிமெண்ட் உற்பத்தி செய்ய முக்கியமாக தேவைப்படும் நிலக்கரியின் விலை 26 விழுக்காடு அதிகரித்துள்ளது. டீசலின் விலை உயர்வினால் போக்குவத்து செலவு அதிகமாகி விட்டது என்று முன்பு விலை உயர்த்தப்பட்டது. கடந்த காலங்களில் சிமெண்ட் விலை படிப்படியாக அத்கரிக்கப்பட்டன. உள்நாட்டின் தேவையை விட உற்பத்தி குறைவாக இருப்பதால் பற்றாக்குறை நிலவுகிறது இதனால் தான் விலை உயர்வு என கருதப்பட்டது. இத்துடன் மழைகாலம் தவிர்த்து அதிகளவு கட்டுமான வேலை நடக்கும் மாதங்களில் விலை அதிகரித்தது.

இந்தியாவிலேயே தென் மாநிலங்களில் சிமெண்ட்டின் விலை மிக அதிகமாக இருந்தது. இங்கு 50 கிலோ மூட்டை ரூ.260 வரை விற்பனை செய்யப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்