பட்ஜெட்-ஏழைகளுக்கு சலுகைகள்: எதிர்க்கட்சியினர் வேண்டுகோள்

வியாழன், 29 ஏப்ரல் 2010 (16:48 IST)
சாதரண மக்களின் வாழ்க்கைத் தரம் உயர பல ஆலோசனைகளை வழங்கிய மக்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஏழைகளுக்கு சலுகைகளை அறிவிக்க வேண்டும் என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கேட்டுக் கொண்டனர்.

மக்களவையில் இன்று மீண்டும் பட்ஜெட் மீதான விவாதம் துவங்கியது. இன்று மாலை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பட்ஜெட் விவாதத்திற்கு பதிலளித்து பேச உள்ளார். அப்போது பல சலுகைகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலையே பட்ஜெட் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

இந்நிலையில் பட்ஜெட் விவாதத்தில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்களில் பலர், விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். அத்துடன் விலைகள் குறைவதற்கு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.

திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் கல்யாண் பானர்ஜி பேசுகையில், ரயில்வே துறை அளித்து வரும் சேவைகள் மீது சேவை வரி விதிப்பதை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன், பெட்ரோலிய பொருட்களின் மீதான வரியையும் குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பகுஜன் சமாஜ் உறுப்பினர் தாரா சிங் சவுகான் பேசுகையில், லட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு நன்மை செய்யும் விதத்தில் பட்ஜெட் இருக்க வேண்டும் என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெகதாம்பிகா பால் பேசுகையில், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் அறிவிப்புகள் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அத்துடன் புதிய வருமான வரி விதிப்பு முறை, அறிமுகப்படுத்த உள்ள சரக்கு-சேவை வரி போன்றவை எளிமையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்