'விசாரணையை சந்திக்க தயார்' - முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது..! சித்தராமையா திட்டவட்டம்.!!

Senthil Velan

வியாழன், 26 செப்டம்பர் 2024 (16:10 IST)
முடா முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆளாக்கப்பட்டுள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதியின் 3.16 ஏக்கர் நிலத்தை, வீட்டுமனை கட்டுவதற்கு பயன்படுத்தியதற்காக மாற்றுநிலமாக 14 வீட்டுமனைகளை மைசூரு நகர வளர்ச்சி ஆணையம் ஒதுக்கியிருந்தது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
 
இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் அளித்த மனுக்களின் பேரில், முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடுக்க, அந்த மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி அனுமதி வழங்கினார். ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து முதலமைச்சர் சித்தராமையா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையில், சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்கத் தடை இல்லை என்று நீதிபதி உத்தரவிட்டு சித்தராமையாவின் மனுவை தள்ளுபடி செய்தார். கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதற்கிடையே கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து நில முறைகேடு புகாரில் முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி கர்நாடகாவில் எதிர்கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.


ALSO READ: "அறநிலையத்துறை வசூல்ராஜா வேலை மட்டுமே செய்கிறது" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை காட்டம்..!!
 
இந்த நிலையில் நிதிமுறைகேடு புகாரில் விசாரணையை சந்திக்க தயார் என்றும் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்றும் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்