கேக்குற உணவை தரமாட்டாங்க.. ஆனாலும் செம கூட்டம்! – ஃபேமஸான மறதிக்காரர்களின் ரெஸ்டாரண்ட்!

புதன், 22 நவம்பர் 2023 (13:42 IST)
பொதுவாக உணவகங்களுக்கு சென்று ஏதாவது உணவு நாம் ஆர்டர் செய்திருந்து, ஆனால் அதற்கு பதிலாக வேறு உணவை கொண்டு வந்து தந்தால் என்ன செய்வோம். நிச்சயமாக அந்த உணவை சாப்பிட மாட்டோம். ஹோட்டல் குறித்து புகார் செய்வோம். ஆனால் உலகிலேயே இந்த ஒரு ரெஸ்டாரண்ட் மட்டும் இந்த விஷயத்தில் வித்தியாசமானது. இங்கு நீங்கள் என்ன ஆர்டர் செய்தாலும் எதை ஆர்டர் செய்தீர்களோ அது கிடைக்காது. ஆனால் அதற்காக யாரும் புகார் செய்யவே மாட்டார்கள்.



ஜப்பான் நாட்டின் டோக்கியாவில்தான் அமைந்துள்ளது இந்த விசித்திரமான ரெஸ்டாரண்ட். அதன் பெயர் தி ரெஸ்டாரண்ட் ஆஃப் மிஸ்டேக்கன் ஆர்டர்ஸ் (The Restaurant of Mistaken Orders) இந்த உணவகத்தின் சப்ளையர்களிடம் நீங்கள் ஒரு உணவை ஆர்டர் செய்தால் அவர்கள் சம்பந்தமே இல்லாமல் வேறு உணவை கொண்டு வந்து தருவார்கள். இப்படிபட்ட உணவகத்திற்கு யார் போவார்கள் என்று யோசிக்கலாம். ஆனால் அந்த உணவகம்தான் பலரும் அப்பகுதியில் விரும்பி சென்று சாப்பிடும் உணவகம். ஏன் தெரியுமா?



அங்கு உணவு ஆர்டர் எடுக்கும் சப்ளையர்கள் அனைவருமே டிமென்சியா எனப்படும் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள். சொல்லப்போனால் அந்த ரெஸ்டாரண்டில் சப்ளையராக சேர வேண்டும் என்றால் டிமென்ஷியா இருக்க வேண்டியது அவசியம். நீங்கள் ஷூஷி கேட்டால் அவர்கள் சிக்கன் சூப் தருவார்கள். பீட்சா கேட்டால் ராமென் தருவார்கள். ஆனால் இதுவும் ஒருவகை த்ரில்லிங்காக இருப்பதாக உணர்கிறார்களாம் அப்பகுதி மக்கள் தாங்கள் ஆர்டர் செய்து விட்டு தங்களுக்கு என்ன உணவு கிடைக்க போகிறதோ என காத்திருப்பது பலருக்கு மிகவும் பிடித்திருப்பதாக கூறியுள்ளனர்.



ஜப்பானிய டிவி தொடர்களை இயக்கி வந்த ஷிரோ ஒகுனிதான் இதை தொடங்கியவர். டிமென்சியா பாதிக்கப்பட்டவர்கள் நலனுக்காக எதையாவது செய்ய வேண்டும் என நினைத்தவருக்கு திடீரென இந்த சிந்தனை உதித்துள்ளது. பொதுவாக டிமென்சியா உள்ளவர்கள் பொதுமக்களிடம் இருந்தே மிகவும் தனிமைப்பட்டே இருப்பார்கள். பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்கள் இந்த மறதி நோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களை குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள உதவும் வகையிலும், டிமென்சியா உள்ளவர்களை சமூகப்படுத்தும் நோக்கிலும் அவர்களையே பணியாளர்களாக கொண்டு ஷிரோ ஒகுனி இந்த உணவகத்தை தொடங்கியுள்ளார்.

தற்போது இந்த உணவகத்திற்கு தினசரி கஸ்டமர்களாகவே பலர் வந்து தப்பு தப்பாக கிடைக்கும் ஆர்டர் உணவுகளை வாங்கி சாப்பிடுகிறார்களாம். ஆனால் டிமென்சியா உள்ள சப்ளையர்களுக்கோ அவர்கள் தினசரி வந்து செல்வது கூட மறந்து விடுகிறதாம்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்