இலங்கையின் புதிய பிரதமர் ஹரிணி டெல்லியில் படித்தவரா? ஆச்சரிய தகவல்..!

Mahendran

வியாழன், 26 செப்டம்பர் 2024 (13:59 IST)
இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமிக்கப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் டெல்லியில் உள்ள கல்லூரியில் படித்தவர் என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் கடந்த வாரம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அனுரகுமார திசநாயக வெற்றி பெற்று புதிய அதிபராக பதவி ஏற்ற நிலையில், பிரதமர் பதவியில் இருந்த தினேஷ் குணவர்தன தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, 54 வயதான ஹரிணி அமரசூரிய பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.

புதிய பிரதமராக பதவி ஏற்றுக் கொண்ட ஹரிணி டெல்லியில் உள்ள இந்து கல்லூரியின் முன்னாள் மாணவி என தெரியவந்துள்ளது. 1991ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை, டெல்லியில் உள்ள இந்து கல்லூரியில் அவர் சமூகவியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த படிப்பை முடித்த பிறகு, அவர் ஆஸ்திரேலியாவில் மேற்படிப்பு படித்தார் என்றும், அதன் பிறகு பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றிய ஹரிணி அரசியலுக்கு வந்து தற்போது பிரதமர் ஆகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், டெல்லி இந்து கல்லூரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கையின் 16-வது பிரதமராக பதவி வகிக்கும் எங்கள் முன்னாள் மாணவி ஹரிணி அவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்துக் கல்லூரி வகுப்பறையில் இருந்து தனது நாட்டின் உயரிய பதவியை அடைந்துள்ள அவருடைய பயணம் இன்னும் பெருமைக்குரியதாக இருக்க வேண்டும்," என்றும் கூறப்பட்டுள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்