ரஷ்யா கைப்பற்றிய சப்ரோசியா அணுமின் நிலையத்தின் நிலை என்ன??

வெள்ளி, 4 மார்ச் 2022 (15:45 IST)
உக்ரைனின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆய்வாளர் ரஷ்யா கைப்பற்றிய சப்ரோசியா அணுமின் நிலையத்தின் நிலை குறித்து தெரிவித்துள்ளார். 

 
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைன் ராணுவத்திற்கும், ரஷ்ய ராணுவத்திற்கும் உக்ரைன் நகரங்களில் கடுமையான மோதல் நிகழ்ந்து வருகிறது. பல பகுதிகளில் உக்ரைன் மக்களே ரஷ்ய ராணுவத்தை உள்ளே வர விடாமல் எதிர்த்து போராடி வருகின்றனர்.
 
உக்ரைனினுள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான சப்ரோசியா அணுமின் நிலையத்தை ரஷ்யா கைப்பற்றியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆய்வாளர் இச்சம்பவம் குறித்து தெரிவித்துள்ளதாவது, சப்ரோசியா அணு உலையில், ரஷ்ய ஏவுகணைகள் வந்து விழுந்து வெடித்ததில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. சப்ரோசியா அணுமின் நிலையத்தின் நிர்வாகக் கட்டடத்தையும், அதன் நுழைவு வாயிலையும், ரஷ்ய வீரர்கள் தங்கள் வசம் கொண்டுவந்துவிட்டனர்.
 
அதேவேளையில், அணுமின் சக்தி தொடர்ந்து கிடைக்கும் வகையில், அணுமின் நிலைய ஊழியர்கள், தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கதிர்வீச்சின் அளவும் இயல்பான அளவிலேயே இருக்கிறது. அணுமின் நிலையத்துக்குள் ஏராளமான உக்ரேனிய தொழிலாளர்கள் கொல்லப்பட்டும், காயமடைந்தும் கிடக்கிறார்கள். 
 
தற்போது 4வது அணு உலை ஒன்று மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக மற்ற மூன்று அணு உலைகளும் இயங்காமல் துண்டித்து வைக்கப்பட்டிருந்தது என்றும் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்