காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை கொல்ல 15 வயது சிறுமி தனது காதலனையே ஏவி விட்ட சம்பவம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தின் ஜூடி மெட்லா ஷிபூர் நகரை சேர்ந்த 39 வயது பெண்மணி அஞ்சலி. இவருக்கு இரண்டு மகள்கள். முதல் கணவருக்கு ஒரு மகள் பிறந்த நிலையில் அவர் இறந்துவிட்டதால் அஞ்சலி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது கணவருக்கு ஒரு மகள் பிறந்தார்.
சமீபத்தில் இரண்டாவது கணவர் ரவி இறந்துவிட்ட நிலையில் இரு மகள்களையும் அஞ்சலி வேலை பார்த்து படிக்க வைத்து வருகிறார். முதல் கணவருக்கு பிறந்த 15 வயது மகள் தற்போது 10ம் வகுப்பு படித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் மோகம் கொண்ட அந்த சிறுமி அதன்மூலமாக நலகொண்டாவை சேர்ந்த சிவா என்ற 19 வயது இளைஞருடன் பழகியுள்ளார்.
நாளடைவில் இவர்கள் காதலிக்கத் தொடங்கிய நிலையில் இந்த விஷயம் தாயார் அஞ்சலிக்கு தெரியவந்து, சிறுமியை கண்டித்துள்ளார். இதனால் தனது காதலுக்கு இடையூறாக இருந்த தாயை கொல்ல சிறுமி திட்டமிட்டுள்ளார். தனது தாயை கொன்றுவிடுமாறு தனது காதலன் சிவாவை கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைத்துள்ளார்.
பின்னர் ஒருநாளில் வீட்டில் யாரும் இல்லாதபோது சிவாவை சிறுமி வரச் சொல்லியுள்ளார். சிவாவும், அவனது தம்பியும் அங்கு வந்து அஞ்சலியை கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளனர். வீட்டிற்கு யாரும் வருகிறார்களா என வெளியே நோட்டம் விட்டபடி இருந்துள்ளார் அந்த சிறுமி. பின்னர் அவர்கள் சென்றதும் தனது தாய் தற்கொலை செய்துக் கொண்டதாக நாடகமாடியுள்ளார்.
சம்பவம் அறிந்து விரைந்த போலீஸார் சிறுமியிடம் விசாரித்தபோது அவர் எக்குத்தப்பாக உளறியதில் போலீஸாருக்கு சந்தேகம் வந்துள்ளது. தொடர்ந்து விசாரித்ததில் உண்மை தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து சிறுமி, அவரது காதலன், காதலனின் சகோதரன் மூவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
Edit by Prasanth.K