அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வமாக வந்துள்ள பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் சையத் ஆசிம் முனீர், அதிபர் டொனால்ட் டிரம்ப்பை இன்று சந்திக்கவுள்ளார். ஜூன் 14 அன்று நடந்த அமெரிக்க ராணுவத்தின் 250வது ஆண்டு விழாவுக்கு முனீருக்கு அழைப்பு இல்லை என வெள்ளை மாளிகை மறுத்த சில நாட்களிலேயே இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று வாஷிங்டன் நேரப்படி பிற்பகல் 1:00 மணிக்கு, வெள்ளை மாளிகையின் அமைச்சரவை அறையில் இந்த மதிய உணவு சந்திப்பு நடைபெற உள்ளது. முனீர், அமெரிக்க வெளியுறவு, பாதுகாப்புத் துறைச் செயலாளர்களையும் சந்திக்கவிருப்பதாக தெரிகிறது.
இஸ்ரேல் - ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. ஈரானுடன் எல்லையை பகிர்ந்துகொள்ளும் பாகிஸ்தான், போர்ச்சூழலில் அமெரிக்காவுக்கு உதவி செய்யும் ஒரு நாடாக கருதப்படுகிறது. மேலும் இன்றைய பேச்சுவார்த்தையில் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முனீரின் ஐந்து நாள் அமெரிக்கப் பயணம், இருதரப்பு ராணுவ மற்றும் நட்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்தை கொண்டது. இருப்பினும், இந்த பயணத்துக்கு பல பாகிஸ்தானியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வாஷிங்டனில் உள்ள முனீரின் ஹோட்டல் மற்றும் பாகிஸ்தான் தூதரகம் முன், "ஆசிம் முனீர், நீங்கள் ஒரு கோழை," போன்ற கோஷங்களை எழுப்பி அவர்கள் போராட்டம் நடத்தினர்.