வைகோ, திருமாவளவன், ராமதாஸ் முதலைக்கண்ணீர்: ராஜபக்சே மகன் கண்டனம்

செவ்வாய், 19 நவம்பர் 2019 (12:04 IST)
இலங்கையில் கோத்தபய ராஜபக்சே புதிய அதிபராக பதவியேற்றிருப்பதற்கு அச்சம் தெரிவித்து தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர். ஒரு நாட்டின் அதிபரை அந்நாட்டு மக்கள் வாக்களித்து தேர்வு செய்திருக்கும் நிலையில் இன்னொரு நாட்டில் இருந்து கொண்டு அரசியல் தலைவர்கள் இவ்வாறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவது சரியா? என்ற நிலையில் இதுகுறித்து தனது வருத்தத்தை ஒரு அறிக்கை மூலம் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ச மகன் நமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
 
தமிழகத்தின்‌ சில தமிழ்‌ அரசியல்‌ தலைவர்கள்‌ இலங்கைத்‌ தமிழ்‌ மக்களை பற்றி ஒருபோதும்‌ ஆழமாக சிந்தித்ததும்‌ இல்லை, அவர்களின்‌ அடிப்படைத்‌ தேவைகள்‌ பூர்த்தி செய்யும்‌ வகையில்‌ எந்த ஒரு ஆக்க பூர்வமான செயற்பாடுகளை செய்ததுமில்லை. மாறாக தங்களுடைய சுயநல மற்றும்‌ சந்தர்ப்பவாத அரசியல்‌ தேவைகளிற்காக எமது நாட்டு மக்களை பகடைக்காயாக பயன்படுத்துவது தான்‌ மிகுந்த வேதனை தரும்‌ உண்மை.
 
எமது கட்சியின்‌ சார்பில்‌ போட்டியிட்ட திரு. கோட்டாபய ராஜபக்ச அவர்கள்‌ இலங்கையின்‌ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போது பல நாடுகளின்‌ தலைவர்கள்‌, குறிப்பாக பாரதப்‌ பிரதமர்‌ உள்ளிட்ட பாரதத்தின்‌ பல அரசியல்‌ தலைவர்களும்‌ தமது வாழ்த்துக்களை வழங்கியிருந்தனர்‌.
 
தமிழகத்தில்‌ தமது சுயநல சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைப்பதற்காக எமது நாட்டில்‌ தமிழ்‌ மக்களைப்பற்றி அக்கறையுள்ளவர்களாகக்‌ காட்டி முதலைக்‌ கண்ணீர்‌வடிக்கும்‌ மதிமுக-வின்‌ பொதுச்‌ செயலாளர்‌ வைகோ, விடுதலை சிறுத்தைகள்‌ கட்சியின்‌ தலைவர்‌ தொல்‌ திருமாவளவன்‌, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ், தமிழர்‌ தேசிய முன்னனி தலைவர்‌ பழ.நெடுமாறன்‌ ஆகியோரின்‌ அறிக்கைகளை கண்ணுற்றேன்‌. அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலைத்‌ தவிர அவற்றில்‌ வேறேதும்‌ இல்லை. எமது மக்களை பகடைக்காய்களாக்கும்‌, எம்மக்களிடையே பகையையும்‌ துவேசத்தையும்‌ தூண்டிவிடும்‌ மூன்றாந்தர அரசியலைத்‌ தவிர வேறு என்ன ஆக்கபூர்வமான விடயத்தை செய்திருக்கிறீர்கள்‌ என்ற கேள்வி என்னுள்‌ எழுவதை என்னால்‌ தடுக்க முடியவில்லை’ என்று கூறியுள்ளார்.
 
2009ல்‌ யுத்தம்‌ நிறைவடைந்த காலத்தில்‌ மறைந்த தமிழகத்தின்‌ முதலமைச்சர்‌ மரியாதைக்குரிய கலைஞர்‌ கருணாநிதியின்‌ கட்சியான திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பிலான பாராளுமன்றக்‌ குழு இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு. வடக்கு - கிழக்கு பகுதிகளை பார்வையிட்டதுடன்‌ முன்னாள்‌ ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன்‌ சிநேக பூர்வமான சந்திப்பிலும்‌ ஈடுபட்டிருந்தமை உலகம்‌ அறிந்த விடயம்‌. அதில்‌ விடுதலை சிறுத்தைகள்‌ கட்சியின்‌ தலைவரும்‌ கெளரவ பாராளுமன்ற உறுப்பினருமான தொல்‌ திருமாவளவன்‌ அவர்கள்‌ கலந்து கொண்டதுடன்‌, எம்முடன்‌ சிநேகபூர்வ கலந்துரையாடலில்‌ ஈடூபட்டதுடன்‌. எமது
நிலைப்பாடுகளையும்‌ தெளிவுற அறிந்து கொண்டிருந்தார்‌. அத்தகையவர்‌ இன்று இவ்வாறு சந்தர்ப்பவாத அறிக்கை விடுவது எமக்கு அதிர்ச்சியாக உள்ளது.
 
 
எமது ஜனாதிபதி உட்பட எமது எதிர்கால அரசாங்கமானது அனைத்து சந்தர்ப்பங்களிலும்‌ வெளிப்படைத்‌ தன்மையுடனும்‌. நல்லெண்ணத்துடனும்‌ செயற்படும்‌.எமது ஜனாதிபதி உட்பட எமது எதிர்கால அரசாங்கமானது அனைத்து சந்தர்ப்பங்களிலும்‌ வெளிப்படைத்‌ தன்மையுடனும்‌, நல்லெண்ணத்துடனும்‌ செயற்படும்‌. தமிழகத்தின்‌ அரசியல்‌ தலைவர்களுக்கு நான்‌ அன்புடன்‌ கூறிக்கொள்ள விரும்புவது யாதெனில்‌, நீங்கள்‌ அனைவரும்‌ அறிக்கையில்‌ நிகழ்கால ஜனாதிபதி மற்றும்‌ அரசை விமர்சிப்பதை விட்டு.. விட்டு நடைமுறை அரசியலில்‌ இலங்கைத்‌ தமிழ்‌ மக்களைப்‌ பற்றி சிந்திப்பது சாலச்‌ சிறந்தது. 
 
ஊடகங்களில்‌ சுயநல, சந்தர்ப்பவாத அறிக்கைகளை மட்டுமே விட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை விடுத்து எமது நாட்டு தமிழ்‌ மக்களை உளப்பூர்வமாக நேசிக்கும்‌ தமிழக தலைவர்களாக நீங்கள்‌ இருந்தால்‌, எமது மக்களது எதிர்கால வாழ்வு சுபிட்சமாக அமைய முடிந்த வரை பொறுப்புடன்‌ செயற்படுவது காலத்தின்‌ கட்டாயம்‌ என தமிழகத்தின்‌ அரசியல்‌ தலைவர்களை அன்புடனும்‌, மரியாதையுடனும்‌ கேட்டுக்‌
கொள்கிறேன்‌.
 
இவ்வாறு நமல் ராஜபக்சே தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்