சிறுவனை தூக்கி சென்ற மலை சிங்கம்: பையை கொடுத்து மீட்ட தந்தை!

செவ்வாய், 21 ஜனவரி 2020 (13:17 IST)
அமெரிக்காவில் சிறுவனை தூக்கி சென்ற மலை சிங்கத்திடம் பையை கொடுத்து சிறுவனை மீட்ட சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள காட்டு பூங்கா ஒன்றில் ஒரு குடும்பத்தினர் நடைபயணம் சென்றிருக்கின்றனர். அவர்களின் மூன்று வயது சிறுவன் அனைவருக்கும் முன்னால் நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறான். திடீரென பாய்ந்து வந்த மலை சிங்கம் ஒன்று மூன்று வயது சிறுவனை முதுகில் கவ்வி தூக்கி கொண்டு ஓடியிருக்கிறது.

சிறுவனை காப்பாற்ற அவனது தந்தை உடனடியாக தான் வைத்திருந்த பையை சிங்கத்தை நோக்கி வீசியிருக்கிறார். பையை கண்டதும் சிறுவனை போட்டுவிட்டு பையை தூக்கி கொண்டு மரத்தின் மேல் ஏறிக்கொண்டிருக்கிறது சிங்கம். மீட்கப்பட்ட சிறுவன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இதுகுறித்து பேசியுள்ள வனத்துறை அதிகாரிகள் மலை சிங்கங்கள் மனிதர்கள் மேல் தாக்குதல் நடத்துவது மிக அரிதாகவே நடைபெறுவதாக கூறியுள்ளனர். 1986ல் இருந்து இதுவரை 17 பேர் மலை சிங்கங்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும் அதில் மூவர் உயிரிழந்ததாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்