முதுமலை சரணாலயம்

கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களுக்கிடையே சுமார் 1000 மீட்டர் உயரத்தில் அமைந்திருப்பதுதான் முதுமலை சரணாலயம். இந்தியாவிலுள்ள சிறந்த ஒரு சில சரணாலயங்களில் இதுவும் ஒன்று.

நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து சுமார் 65 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள முதுமலைக் காடு 21776 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. நீலகிரி வனத்துறையின் கீழ் வரும் இச்சரணாலயம் இந்தியாவின் ஒருங்கிணைக்கப்பட்ட பழமையான தேசிய சரணாலயமாகும்.

அடர்ந்த காடு, ஆழ்ந்த சமவெளிகள், ஆறுகள், ஓடைகள், நீர்வீழ்ச்சிகள் என முதுமலை சரணாலயத்தில் இயற்கையின் அழகு கொட்டிக்கிடக்கிறது. இச்சரணாலயத்தில் எங்கு பார்த்தாலும் விதவிதமான மரங்களும், வகைவகையான விலங்குகளும் காணப்படும்.

முதுமலை தேசிய பூங்காவும் இங்கு அமையப் பெற்றுள்ளது. ஏராளமான உள்நாட்டு பறவைகளோடு வெளிநாட்டு பறவைகளும் தேசியப் பூங்காவை அழகுப்படுத்துகிறது.

வாகனங்கள் மூலமாகவும், பழக்கப்பட்ட யானைகள் மூலமாகவும் சரணாலயத்தை சுற்றிப் பார்க்க வனவிலங்குத் துறை ஏற்பாடு செய்திருப்பது குறிப்பிடத் தக்க அம்சமாகும்.

மார்ச் முதல் ஜீன் மாதம் வரை சரணாலயத்திற்கு சென்றுவர உகந்த காலங்கள் ஆகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்