ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களின் பதவி தப்புமா?

வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (09:08 IST)
துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களின் பதவி தப்புமா? என்பது  இன்று வெளிவரவுள்ள தீர்ப்பில் தெரியவரும்
 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியபோது ஒபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் எதிராக வாக்களித்தனர். கொரடா உத்தரவை மீறி எதிர்த்து வாக்களித்த ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. கொறடா சக்கரபாணி ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். இதே கோரிக்கையுடன் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 4 பேர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
 
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று மதியம் 2.15 மணிக்கு வெளியாகவுள்ளது. இன்றைய தீர்ப்பு தான் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர்களின் அரசியல் எதிர்கால வாழ்க்கையை முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பு, நாளை வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு வழக்குகளின் தீர்ப்பில்தான் அதிமுக ஆட்சி தொடர்வதும் முடிவதும் உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்