விடுதலை படத்தில் இந்த நாவலில் இருந்து காட்சிகள் காப்பி அடித்துள்ளார்… பிரபல எழுத்தாளரின் குற்றச்சாட்டு

திங்கள், 3 ஏப்ரல் 2023 (14:49 IST)
கடந்த வாரம் வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. ரசிகர்கள் மட்டும் இல்லாமல் திரையுலகைச் சேர்ந்தவர்களும் கூட பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இடதுசாரி இயக்கத்தை சேர்ந்தவர்களால் படம் எதிர்மறையாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

படத்துக்கான மூலக்கதையாக வெற்றிமாறன் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையையும், இயக்குனர் தங்கம் எழுதிய ‘வேங்கைச்சாமி’ என்ற திரைக்கதையையும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த இரண்டு கதைகளையும் விட எழுத்தாளர் ச பாலமுருகன் எழுதிய சோளகர் தொட்டி நாவலில் இருந்து அதிக காட்சிகளைக் காப்பியடித்துள்ளதாக பிரபல எழுத்தாளர் இரா முருகவேள் குற்றம் சாட்டியுள்ளார். சோளகர் தொட்டி நாவல் வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது மலைவாழ் மக்கள் ஒர்க்‌ஷாப் என்ற பெயரில் நிர்வாணப்படுத்தப் பட்டு மின்சாரம் பாய்ச்சி கொடுமைப் படுத்தப்பட்டதை ஆவணப்படுத்தும் நாவல் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாவலை நினைவுப் படுத்தும் போலீஸ் விசாரணைக் காட்சிகள் விடுதலை படத்திலும் இடம்பெற்றுள்ளது.
இரா முருகவேள்

இதுபற்றி எழுத்தாளர் இரா முருகவேளின் முகநூல் பதிவில் “விடுதலை ஒரு மிகப் பெரிய அட்டூழியம் செய்து உள்ளது. கதை ஜெயமோகன் என்று உள்ளது. ஆனால் பாலமுருகன் எழுதிய சோள கர் தொட்டி நாவலில் இருந்தும், சிவ சுப்பிரமணியன் எழுதிய வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் நூலில் இருந்தும் இஷ்டத்துக்கு சுட்டு இருக்கிறார்கள்.  தர்மபுரி நக்சல் வேட்டையான அஜந்தா operation நடந்த போது ஏது மாதேஸ்வரன் மலை ஒர்க்ஷாப்!.அபத்தமான அவியலான படம். பழனி பஞ்சாமிர்தம், பாண்டியன் ஊறுகாய், மாங்காய் ஜுஸ், லெமன் சோடா, நர்சுஸ் காபி எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கி மிக்ஸியில் அடித்து செய்த கதை. அரசியலோ வரலாற்று நேர்மையோ கொஞ்சமும் இல்லை.” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்