ஒரு ரூபாய் கூட பெற்றுக் கொள்ளாமல் கலைஞர் தமிழ்நாட்டுக்கு காணிக்கை.. வைரமுத்து நன்றி

Siva

வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (09:45 IST)
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படுவதாக நேற்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளதை அடுத்து ஒரு ரூபாய் கூட பெற்றுக் கொள்ளாமல் கலைஞர் தமிழை நாட்டுடைமை ஆகியதற்கு கலைஞர் குடும்பத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கவியரசு வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டரசு
கலைஞர் படைப்புகளை
நாட்டுடைமை செய்திருப்பதை
வாழ்த்துகிறேன்; வரவேற்கிறேன்

தமிழையும் தமிழர்களையும்
மீட்டெடுக்கும் போராட்டத்தின்
ஒருபகுதிதான் அவரது எழுத்து

தன் உயிரையும் உதிரத்தையும் ஊற்றிவைத்த  கொள்கலன்தான்
அவரெழுத்து

அது உலகுக்கே
பொதுவுடைமை ஆவது
வீட்டுக்கொரு சூரியன்
விளக்கேற்ற வந்தது
போன்றதாகும்

இளைஞர்கள்
மொழிச் செப்பமுறவும்
கொள்கைத் திட்பம்பெறவும்
கலைஞர் எழுத்துக்குள் பயணிக்க
இது ஒரு நூற்றாண்டு வாய்ப்பு

மாண்புமிகு முதல்வர்
மு.க.ஸ்டாலின்
அவர்களுக்கு நன்றி

ஒரு ரூபாயும்
பெற்றுக் கொள்ளாமல்
கலைஞர் தமிழை நாட்டுக்கே
காணிக்கை செய்திருக்கும்
கலைஞர் குடும்பத்திற்கு
என் சிறப்பு நன்றி

கலைஞர் வாழ்வார்
என்பது தெரியும்

இனி - நீள்வார்

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்