பேச்சு வார்த்தை வெற்றி - சினிமாத்துறையின் வேலை நிறுத்தம் வாபஸ்

புதன், 18 ஏப்ரல் 2018 (07:21 IST)
அரசின் தலைமையில் நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்தம் விரைவில் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், டிஜிட்டல் கட்டணக் கொள்ளை மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு எதிரான போராட்டத்தை, கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் நடத்தி வருகிறார்கள். மார்ச் 16 ஆம் தேதி முதல் தமிழகத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதுடன், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் நிறுத்தப்பட்டன. மார்ச் 23 ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் நடைபெற்ற படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. 
 
இதனால் பல கலைஞர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் பல படங்களை திரையிட முடியாமல் படக்குழுவினர் தவித்து வருகின்றனர். இந்த பிரச்சனையை தமிழக அரசு தான் தீர்க்க வேண்டும் என நடிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்தது
இந்நிலையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், டிஜிட்டல் சேவை ஒளிபரப்பு நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தின.
 
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த விஷால் இனி எல்லா திரையரங்குகளிலும் டிக்கெட் விற்பனை கணினி மூலமாகவே நடைபெறும் எனவும் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும்போது கூடுதலாக வசூலிக்கப்படும் கட்டணம் இனிமேல் வசூலிக்கப்பட மாட்டாது எனவும் வேலை நிறுத்தம் குறித்து நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதனால் வரும் வெள்ளிக்கிழமை முதல் படங்கள் ரிலீஸாக வாய்ப்புண்டு என தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்