முடிவுக்கு வந்த தலைவி ரிலீஸ் பிரச்சனை! அறிவித்த தேதியில் ரிலீஸ்!

வியாழன், 2 செப்டம்பர் 2021 (16:50 IST)
தலைவி படத்தின் ரிலீஸ் சம்மந்தமாக எழுந்த பிரச்சனை பேச்சுவார்த்தைக்குப் பின் முடிவுக்கு வந்துள்ளது.

பிரபல இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவான திரைப்படம் ’தலைவி’. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இந்த படம் கடந்த மார்ச் மாதமே ரிலீசுக்கு தயாரானது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் இந்த படம் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை .

இந்த நிலையில் ’தலைவி’ படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடந்தாலும் படக்குழுவினர் உறுதியாக ஓடிடியில் ரிலீஸ் இல்லை என்று அறிவித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு உள்பட ஒருசில மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டு விட்டன என்பதும் அக்ஷய் குமாரின் பெல்பாட்டம் உள்பட ஒரு சில படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஓடிடியில் திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது பட ரிலீஸில் புது சிக்கல் உருவாகியுள்ளது. அது என்னவென்றால் படத்தின் திரையரங்க ரிலீஸூக்கு பின்னர் 15 நாட்களில் ஓடிடியில் ரிலிஸ் செய்வதாக ஓடிடி நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் ஒப்புக்கொள்ளவில்லையாம். குறைந்தது நான்கு வாரங்கள் இடைவெளியாவது வேண்டும் எனக் கூறினர்.

இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் தயாரிப்பாளர் திரையரங்க ரிலீஸுக்கு நான்கு வாரங்கள் பின்னரே ஓடிடியில் வெளியிட முடிவு செய்து பிரச்சனையை முடித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்