சூர்யா பாலா இணையும் படத்தின் தலைப்பு இதுவா? வெளியான தகவல்!

புதன், 1 ஜூன் 2022 (11:45 IST)
இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.

இயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் நாச்சியார். அதன் பிறகு அவர் இயக்கிய வர்மா திரைப்படம் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு வேறொரு இயக்குனரை வைத்து முழுப் படத்தையும் எடுத்து ரிலீஸ் செய்தனர். இதையடுத்து இயக்குனர் பாலாவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் சூர்யா, அவர் இயக்கத்தில் நடித்து அந்த படத்தை தயாரிக்கவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து 34 நாட்கள் கன்னியாகுமரியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே மோதல் எழுந்து, சூர்யா அங்கிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அது உண்மையில்லை என்று தயாரிப்பு தரப்பு விளக்கம் அளித்தது.

ஆனாலும் தொடர்ந்து அதுபோன்ற வதந்திகள் பரவி வந்த நிலையில் இப்போது சூர்யா, இயக்குனர் பாலாவோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து “மீண்டும் படப்பிடிப்புத் தளத்துக்கு செல்ல ஆர்வமாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார். இந்த டிவீட் இணையத்தில் கவனத்தைப் பெற்றது.

இந்நிலையில் படத்தின் தலைப்பு பற்றிய தகவல்கள் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றன. கதைக்களம் கடலை சுற்றி அமைக்கப்பட்டுள்ளதாலும், கதாநாயகனான சூர்யா படகோட்டியாக வருவதாகவும் சொல்லப்படும் நிலையில் இயக்குனர் பாலா ‘கடலாடி’ என்ற தலைப்பை வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுதவிர மற்றொரு தலைப்பும் ஆலோசனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்