மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு செல்ல ஆசை – எஸ்பிபி குறித்து சரண்!

புதன், 23 செப்டம்பர் 2020 (15:45 IST)
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ் பி பாலசுப்ரமண்யம் உடல்நிலை சீராக முன்னேறி வருவதாக அவர் மகன் எஸ் பி சரண் தெரிவித்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சமீபத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டதாகவும் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாகவும் எஸ்பிபி சரண் அவர்கள் தெரிவித்துள்ளார் 

இருப்பினும் அவரது நுரையீரலில் இருக்கும் பாதிப்புக்கு தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் பிசியோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் எஸ்பிபி சரண் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் எஸ்பிபி அவர்கள் தற்போது எழுந்து உட்காருகிறார் என்றும் 15 முதல் 20 நிமிடங்கள் அவரால் உட்கார முடிகிறது என்றும் மேலும் அவர் பேச்சு பயிற்சி செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது சரண் எஸ்பி பி உடல்நிலை குறித்து டிவிட்டரில் ‘தந்தையின் உடல்நிலையில் சீரான முன்னேற்றம் உள்ளது. அவர் திரவ உணவுகளை உட்கொண்டு வருகிறார். வெண்டிலேட்டா், எக்மோ கருவிகளுடன் தொடா்ந்து சிகிச்சையளிக்கப்படுகிறது. பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து செல்ல வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளார்’ எனத் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்