கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான ராஜ்குமாரின் மூத்த மகனான சிவராஜ், கடந்த 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். சமீபத்தில் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயம் ஆனார். அதன் பின்னர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் அவர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதையடுத்து சிகிச்சை எடுக்க அமெரிக்கா சென்றார். அங்குள்ள மியாமி புற்றுநோய் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. அவரது சிறுநீர்ப் பை வெற்றிகரமாக அகற்றப்பட்டு குடலில் இருந்து செயற்கையாக ஒரு சிறுநீர்ப்பை உருவாக்கப்பட்டு பொறுத்தப்பட்டது. இப்போது அவர் குணமாகி சினிமாவில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். விரைவில் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கமல்ஹாசன் மேல் தனக்கிருக்கும் அன்பு பற்றி அவர் சமீபத்தில் பேசியுள்ளார். அதில் “கமல்ஹாசன் என்றால் அழகு. நான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் அவரைதான் திருமணம் செய்திருப்பேன். இதை நான் பல மேடைகளில் சொல்லி இருக்கிறேன். ஒருமுறை அவர் என் வீட்டுக்கு, என் அப்பாவைப் பார்க்க வந்த போது அவரையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பா என்னை அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது நான் அவரிடம் ஒருமுறை உங்களைக் கட்டிப் பிடித்துக் கொள்ளலாமா எனக் கேட்டேன். அவர் என்னைக் கட்டிப்பிடித்ததும் அடுத்த மூன்று நாட்களுக்கு நான் குளிக்கவே இல்லை. அவருடைய aura என் மீது இருக்க வேண்டும் என நினைத்தேன். அந்தளவுக்கு நான் அவருடைய வெறித்தனமான ரசிகன்” எனக் கூறியுள்ளார்.