‘நான் எய்ட்ஸ் நோயால் இறந்துவிட்டதாக வதந்தி கிளப்பிட்டாங்க’ – நடிகர் மோகன் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!

vinoth

வெள்ளி, 7 ஜூன் 2024 (08:37 IST)
கன்னடத்தில் இருந்து தமிழ் மொழிக்கு வந்த மோகன் மெல்லிய காதல் படங்களில் நடித்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். 80 களில் அவர் நடித்த பல படங்கள் 175 நாட்களைக் கடந்து ஓடி சாதனைப் படைத்ததால் சில்வர் ஜூப்ளி ஸ்டார் என்ற அடைமொழியோடு வலம் வந்தார். ஆனால் 90 களுக்கு பிறகு அவர் பார்முலா படங்களுக்கு வரவேற்பு இல்லாமல் போனது. அதனால் அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார்.

இதனால் அவர் பல ஆண்டுகள் சினிமாவை விட்டே விலகிப் போய்விட்டார். கடைசியாக அவர் 14 ஆண்டுகளுக்கு முன்னர் ‘சுட்டபழம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இப்போது ‘ஹரா’ ‘தி கோட்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் ஹரா திரைப்படம் இன்று ரிலீஸாகிறது.

இது சம்மந்தமாக அவர் அளித்த ஒரு நேர்காணலில் தன்னைப் பற்றி பரவிய ஒரு வதந்தி பற்றி பேசியுள்ளார். அதில் “நான் சினிமாவில் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்தேன். அப்போது நான் எய்ட்ஸ் நோயால் இறந்துவிட்டதாக வதந்தியை சிலர் கிளப்பி விட்டனர். அதை நம்பி என்னுடைய ரசிகர்கள் என் வீட்டுக்கே வந்துவிட்டனர். ஆனால் நான் அந்த வதந்திக்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை. ஏனென்றால் ஒரு முட்டாள்தனமான வதந்திக்கு நான் ஏன் பதிலளிக்க வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

அவரைப் பற்றி அந்த வதந்தியைப் பரப்பியது யார் என்று அவர் சொல்லவில்லை. ஆனாலும் அவர் கூட நடித்த ஒரு நடிகைதான் அப்படி வதந்தியைப் பரப்பியதாக சினிமா வட்டாரத்தில் ஒரு தகவல் பல ஆண்டுகளாக சொல்லப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்