சூதாட்ட விழிப்புணர்வுக்காக ஒரு படமே எடுத்தேன்… நடிகர் ராஜ்கிரனின் அக்கறைப் பதிவு

புதன், 29 ஜூன் 2022 (09:17 IST)
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட செயலிகளால் மக்கள் பலர் பணத்தை இழப்பதுடன், மேலும் கடன் வாங்கி விளையாடி கடன் கட்ட முடியாமல் சிக்குவது, மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்வது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு தடை விதிப்பது குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு குழுவை அமைத்தார். கடந்த சில மாதங்களாக ஆய்வுகளை நடத்திய ஆய்வுக்குழு தற்போது இந்த ஆய்வின் அறிக்கையை முதல்வரிடம் சமர்பித்துள்ளனர். இதனால் விரைவில் தமிழக அரசு இந்த ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் சில தமிழ் நடிகர்கள் நடித்து வருகின்றனர். அது பொதுமக்கள் மத்தியில் அவர்கள் விமர்சனம் எழ காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான ராஜ்கிரண் இதுபற்றி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவரது பதிவில் “ சீட்டாட்டம் என்பது,மிக மிக மோசமான சூது. சீட்டாட்டத்தினால் தெருவுக்கு வந்த குடும்பங்கள் ஏராளம்... சீட்டாட்டத்தினால் ஏற்படும் வெறியும், போதை போன்ற மயக்கமும் அந்தப்பழக்கத்தை தொட்டவரை விடவே விடாது... சீட்டாட தேவைப்படும் பணத்துக்காக எவ்வித கீழ்நிலைக்கும் போவதற்கு தயங்கமாட்டார்கள், அதற்கு அடிமையானவர்கள்... இதில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான், "எல்லாமே என் ராசா தான்" என்று, ஒரு படமே எடுத்தேன்.

அந்தக்காலகட்டங்களில் சீட்டாடுவது சட்டப்படி குற்றமாயிருந்தது. காவல் துறை கைது செய்தால் கேவலமாகிவிடுமே என்ற பயமும் இருந்தது. ஆனால், இப்போது சீட்டாட்டம் டிஜிட்டல் மயமாகி,  "ஆன்லைன் ரம்மி" என்ற பெயரில், எந்தப்பயமுமில்லாமல் எல்லோரும் ஆடலாம் என்றாகி, ஏகப்பட்ட தற்கொலைகள் நடந்து, பல குடும்பங்கள் தெருவுக்கு வந்துவிட்டன. அரசு இதைத்தடுக்க முனைந்திருப்பது, மனதுக்கு கொஞ்சம் ஆறுதலளிக்கிறது. “ என பதிவிட்டுள்ளார்.

தமிழ் நடிகர்களில் எந்த ஒரு விளம்பரத்திலும் நடிக்காத நடிகர்களில் ராஜ்கிரண் முக்கியமானவர். முன்னர் வேட்டி விளம்பரம் ஒன்றில் நடிக்க தனக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் தருவதாக சொன்னபோதும் நடிக்க மறுத்ததாக அவர் ஒரு நேர்காணலில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்