உங்கள் படம் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது… இயக்குனருக்கு மெஸேஜ் செய்த ராஜமௌலி!

செவ்வாய், 16 மார்ச் 2021 (07:51 IST)
சமீபத்தில் வெளியான திருஷ்யம் படத்தைப் பற்றி அதன் இயக்குனர் ஜீத்து ஜோசப்புக்கு இயக்குனர் ராஜமௌலி பாராட்டை அனுப்பியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்நிலையில் இப்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன்லால் நடிக்க ஜீத்து ஜோசப்பே இயக்கி நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் நேற்று வெளியானது. வெளியானதில் இருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இப்போது தெலுங்கில் ரீமேக் செய்வதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இயக்குனர் ராஜமௌலி இந்த படத்தைப் பார்த்துவிட்டு இயக்குனர் ஜீத்து ஜோசப்புக்கு மெஸேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார் ஜீத்து. அதில் ‘சில தினங்களுக்கு முன்னர் திருஷ்யம் 2 பார்த்தேன். அதன் தாக்கத்தால் மீண்டும் திருஷ்யம் 1 பார்த்தேன். படத்தில் எடிட்டிங், திரைக்கதை மற்றும் நடிப்பு உள்ளிட்ட அனைத்தும் வியக்க வைக்கும் அளவுக்கு இருந்தன. ஆனால் எல்லாவற்றையும் விட உங்கள் திரைக்கதை வியக்க வைத்தது. முதல்பாகமே ஒரு மாஸ்டர்பீஸ்தான். ஆனால் அதோடு பொருந்தும் அளவுக்கு இவ்வளவு விறுவிறுப்பாக இரண்டாம் பாகம் என்பது திறமையின் உச்சம். இதுபோல உங்களிடம் இருந்து இன்னும் சிறந்த படைப்புகள் வரட்டும்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்