"ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்ய ஏற்பாடு"

புதன், 11 டிசம்பர் 2019 (11:51 IST)
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
தினமணி - "ரேஷன் கடைகளில் வெங்காய விற்பனை செய்ய ஏற்பாடு"
 
நியாயவிலைக் கடைகளிலும் வெங்காயம் விற்பனை செய்யப்பட உள்ளது என உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
திருவாரூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளார்களுக்கு அவா் அளித்த பேட்டியில், கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலையில் மாற்றம் இருக்கிறது. இதற்குக் காரணம், வெங்காயம் விளையும் இடங்களில் கூடுதலாக மழை பெய்ததும், அதனால் வெங்காயம் அழுகிப் போனதுமே ஆகும். இதனாலேயே வெங்காய விலை கூடுதலாக உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கூடுதல் மழை பெய்ததால், பெரிய வெங்காய உற்பத்தி பாதிப்படைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
 
இதேபோல், "தமிழகத்தில் சின்ன வெங்காயம் அதிகம் விளையும் இடங்களில் கூடுதலான மழை பெய்ததால், சின்ன வெங்காய விலையிலும் மாற்றம் இருக்கிறது. ஆனால், வெங்காய விலை பிரச்னையில், தமிழக அரசு எந்தவித நடவடிக்கையுமே எடுக்காதது போல, திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்
 
எப்போதுமே நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெங்காய விலையில் ஏற்றம் இருக்கும். இதற்காக செப்டம்பா் 23-இல் கூட்டுறவுத்துறை அமைச்சருடன் இணைந்து கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் வெங்காய விலையேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டதோடு, பெரிய வியாபாரிகள் 50 டன் அளவிலும், சிறிய வியாபாரிகள் 10 டன் அளவிலும் இருப்பு வைத்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது.
 
மேலும், நவம்பர் மாதத்தில் விலையேற்றம் அதிகரித்தவுடன் நவம்பா் 4, 6, 8 ஆகிய தேதிகளில் கூட்டம் நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, பண்ணை பசுமைக் கடைகளில் ரூ. 30, 40-க்கு வெங்காயத்தை விற்க முடிவெடுக்கப்பட்டு, இன்றுவரையிலும் ரூ.40-க்கு வெங்காயம் விற்பனை நடைபெற்று வருகிறது.
 
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது. தமிழகத்தில் வெங்காயத் தட்டுப்பாட்டைப் போக்க, மத்திய அரசிடம் 1000 மெட்ரிக் டன் கேட்டுள்ளோம். முதல் கட்டமாக டிசம்பா் 12, 13 தேதிகளில் 500 மெட்ரிக் டன் வந்து விடும். அவற்றை மானிய விலையில் நியாயவிலைக் கடைகளில் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கென சுமார் 6000 கடைகள் தயார் நிலையில் உள்ளன" என்று அமைச்சர் காமராஜ் கூறியதாக இந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்