ஊட்டியில் ’சூர்யா 44’ படப்பிடிப்பு.. திடீரென போலீஸ் விசாரணையால் பரபரப்பு..!

Siva

வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (16:02 IST)
ஊட்டியில் சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் திடீரென படப்பிடிப்பு தளத்தில் போலீசார் விசாரணை செய்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யா 44 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமான் தீவுகளில் நடந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஒரு சண்டைக் காட்சியின் படப்பிடிப்பின் போது சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் தற்போது ஓய்வில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் 155 ரஷ்ய துணை நடிகர்கள் கலந்து கொண்ட நிலையில் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. சுற்றுலா விசாவில் வந்தவர்கள்  திரைப்படத்தில் நடிக்க கூடாது என்ற விதி இருக்கும் நிலையில் அவர்களை நடிக்க அனுமதித்தது எப்படி என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் ரஷ்ய துணை நடிகர்கள் அனைவரும் ஊட்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு இருக்கும் நிலையில் அது குறித்த தகவல்களை ஹோட்டல் நிர்வாகத்தினர் காவல் துறைக்கு ஏன் தெரிய வைக்கவில்லை என்ற விசாரணையும் நடந்து வருவதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்