போலீஸ் வரை போன பஞ்சாயத்து... சிக்கலில் சாய் பல்லவி?

வெள்ளி, 17 ஜூன் 2022 (08:26 IST)
நடிகை சாய் பல்லவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ளார். 

 
நடிகை சாய் பல்லவி தமிழ் பெண்ணாக இருந்தாலும் மல்லுவுட்டில் அறிமுகமாகி தற்போது டோலிவுட்டை கலக்கி வரும் முன்னணில் நடிகையாக உள்ளார். தெலுங்கு சினிமாவில் அதிகம் காணப்படும் சாய் பல்லவி தனது சமீபத்திய பேட்டியால் சர்ச்சையில் சிக்கினார். ஆம், அவர் நடித்து ரிலீஸுக்கு தயாராக உள்ள விராட பர்வம் படத்தின் ப்ரமோஷனின் போது பேசியது சர்ச்சைக்குள்ளானது. 
 
அவர் தனது பேட்டியில், நான் ஒரு நடுநிலையான குடும்பத்தில் பிறந்தவள். என்னை பொருத்த வரை வன்முறை என்பது தவறான விஷயம். நான் நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்று தான் சொல்லிக்கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டேன். 
 
என்னை பொருத்தவரை காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் சொல்லப்பட்ட காஷ்மீர் பண்டிட்கள் கொலை மற்றும் மாடுகளை கொண்டு சென்ற இஸ்லாமியர்களை வழிமறித்து ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல கட்டாயப்படுத்தி தாக்குதல் நடத்தியது ஆகிய இரண்டிற்கு பெரிய வேறுபாடுகள் இல்லை என கூறினார். 
 
வன்முறை எங்கு நடந்தாலும் வன்முறைதான் என பேசிய சாய் பல்லவிக்கு கண்டனங்கள் பல எழுந்தன. இதனைத்தொடர்ந்து தற்போது நடிகை சாய் பல்லவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த அகில் என்பவர் ஐதராபாத் சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 
 
புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார் சாய் பல்லவி பேசிய வீடியோவை பார்த்து சட்ட ஆலோசனைக்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்