குழந்தைக் கடத்தல்… அதன் பின்னர் நிகழும் அதிர்ச்சி சம்பவங்கள்… ஓடிடி ஹிட் ‘ஸ்டோலன்’ எப்படி இருக்கு?

வெள்ளி, 13 ஜூன் 2025 (12:07 IST)
கடந்த சில தினங்களாக சமூகவலை தளங்களில் அதிகளவில் விமர்சிக்கப்படும் படமாக ‘ஸ்டோலன்’ படம் அமைந்தது. கடந்த வாரம் அமேசான் ப்ரைம் வீடியோவில் இந்த படம் வெளியான நிலையில் உடனடியாக இந்தியா முழுவதும் கவனத்தைப் பெற்றுள்ளது. இத்தனைக்கும் இந்த படத்தில் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர்களோ அல்லது தொழில்நுட்பக் கலைஞர்களோ இல்லை.

ஒரு நள்ளிரவில் ரயில்வேல் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் ஜும்பா என்ற பெண்னிடம் இருந்து அவளின் 2 மாதக் குழந்தை சம்பா கடத்தப்படுகிறார். அந்த  கடத்தல் சம்பவத்தில் சாட்சியாக ஒரு புகைப்படக் கலைஞன் இருக்க, அந்த பெண்ணுடனும் போலீஸுடனும் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இவர்களோடு புகைப்படக் கலைஞனை அழைத்துச் செல்ல வந்திருந்த அவனின் அண்ணனும் விருப்பமில்லாமல் இணைகிறான்.

போலிஸுடன் அந்த நள்ளிரவில் கிளம்பும் அவர்கள் தேடல் மறுநாள் மதியம் ஒரு மருத்துவமனையில் குழந்தையைக் கண்டுபிடிப்பதோடு முடிகிறது. இந்த தேடலில் அடுத்தடுத்து அவிழும் மர்மங்கள், கதாபாத்திரங்கள் அடையும் மாற்றங்கள் என விறுவிறுப்பான தொனியில் படமாக்கியுள்ளார் இயக்குனர்.

முதல் பாதியில் படத்தில் இருந்த ஆழமான உரையாடல்கள் மற்றும் காட்சிகள் இரண்டாம் பாதியில் நீர்த்துப் போய் ஒரு த்ரில்லர் அனுபவத்தை மட்டுமே கொடுக்கின்றது. கும்பல் மனநிலையால் நடக்கும் தவறுகளை சுட்டுக்காட்டுகிறேன் என்ற பெயரில் இயக்குனர் அதை மிகவும் மிகைபடுத்தி விட்ட உணர்வே இரண்டாம் பகுதியில் எஞ்சுகிறது. கமர்ஷியல் படங்களில் வில்லனின் அடியாட்கள் ஆயுதங்களோடு கதாநாயகனைத் துரத்துவது போல ஊர்பொதுமக்கள் கதைமாந்தர்களை துரத்துவது போன்ற காட்சிகள் எல்லாம் நம்பத்தகுந்தனவாக இல்லை. அதையெல்லாம் தவிர்த்து குழந்தைக் கடத்தல், வாடகைத் தாய் சுரண்டல்கள், கர்ப்பப் பை விற்பனை போன்றவற்றின் பின்னுள்ள அரசியல் ஆகியவற்றை பற்றி பேசியிருந்தால் படம் இன்னும் மெருகேறியிருக்கும் என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்