களவாணி இயக்குனருக்குக் கொலை மிரட்டல் – மௌனம் கலைக்காத விமல் !

சனி, 11 மே 2019 (14:16 IST)
களவாணிப் படத்தின் இயக்குனர் சற்குணத்திற்குத் தயாரிப்பாளர் சிங்காரவேலன் கொலைமிரட்டல் விடுத்துள்ளதாக காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

கிராமத்துப் படம் என்றாலே கோயம்புத்தூர், மதுரை, தேனி என்று இருந்த தமிழ் சினிமா வழக்கத்தை மாற்றி தஞசாவூர் கிராமத்து வாழ்க்கையை அசலாக பதிவு செய்தப் படம் களவாணி. இதனை புதுமுக இயக்குனரான சற்குணம் இயக்க விமல், ஓவியா, சரண்யா, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து அதன் இரண்டாம் பாகம் இப்போது தயாராகியுள்ளது.

ரிலிஸூக்கு தயாராக உள்ளநிலையில் இப்படத்திற்கு ஸ்ரீ தனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ‘களவாணி 2’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஜூன் 10 ஆம் தேதி வரை படத்தை வெளியிட இடைக்காலத் தடை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து படத்தின் இயக்குனரான சற்குணம் வீடியோ ஒன்றின் மூலம் இதற்கு விளக்கம் அளித்தார். அதில் ‘ படத்துக்குத் தடை வாங்கியுள்ளவரை நான் நேரில் சந்தித்தது கூட இல்லை. இது குறித்து தயாரிப்பாளரிடம் கேட்டபோது அது விமல் சம்மந்தமான பிரச்சனையாக இருக்கலாம் எனத் தெரிவித்தார். விமலுக்கும் அவர்களுக்கும் என்ன பிரச்சினை என்பது எனக்குத் தெரியாது. நீதிமன்றத்தின் மீது நான் அளவுகடந்த நம்பிக்கை வைத்துள்ளேன்.  எனக்கான நீதியையும் நீதிமன்றம் வழங்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது தனக்கு தயாரிப்பாளர் சிங்காரவேலன் மற்றும் காமரன் ஆகியோர் தனக்குக் கொலை மிரட்டல் விடுவதாக இயக்குனர் சற்குணம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் ’களவாணிப் படத்தின் தயாரிப்பாளர் விமல்தான் என்பதுபோல போலிப் பத்திரங்களை தயார் செய்து மேலும் படத்தின் தலைப்பு மற்றும் விநியோக உரிமையை அவருக்கு விற்றது போல போலி ஆவணங்களை உருவாக்கியுள்ளனர். ‘ எனத் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தப் பிரச்சனையின் மையமாக இருக்கும் விமல் இதுவரை களவாணிப் பிரச்சனைப் பற்றி வாய் திறக்காமல் மௌனமாக உள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்