ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது கொடுக்காதது அவமானம்! - ஆடுஜீவிதம் இயக்குனர் ஆவேசம்!

Prasanth Karthick

சனி, 17 ஆகஸ்ட் 2024 (15:31 IST)

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கேரள மாநில திரைப்பட விருதுகளில் விருது அறிவிக்கப்படாததற்கு ஆடுஜீவிதம் பட இயக்குனர் ப்ளெஸ்ஸி கருத்து தெரிவித்துள்ளார்.

 

 

சமீபத்தில் 54வது கேரள மாநில திரைப்பட விருதுகள் பல்வேறு பிரிவுகளில் அறிவிக்கப்பட்டது. கேரள அமைச்சர் ஷாஜி செரியன் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார். கேரள படங்களுக்கு வழங்கப்படும் இந்த மாநில விருதுகளில் ப்ளெஸ்ஸி இயக்கி ப்ரித்விராஜ் நடித்த ஆடுஜீவிதம் திரைப்படம் சிறந்த நடிப்பு, இயக்கம், ஒப்பனை, திரைக்கதை என மொத்தம் 9 பிரிவுகளில் விருதுகளை குவித்துள்ளது.

 

ஆனால் இந்த படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எந்த விருதுகளும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் தேசிய விருதுகளின் அறிவிப்பில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

கேரள மாநில விருதுகளில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது வழங்காதது குறித்து அதிருப்தி தெரிவித்த ஆடுஜீவிதம் இயக்குனர் ப்ளெஸ்ஸி “இந்த படத்தின் ஆன்மாவாக இருந்தது இசைதான். இந்த படத்திற்கு இசை முக்கியம் என்பதால்தான் ஏ.ஆர்.ரஹ்மானை இதில் கொண்டு வந்தோம்.

 

படத்திற்கான பிண்ணனி இசையில் ஏ.ஆர்.ரஹ்மான் மேற்கொண்ட மெனக்கெடல்கள் அசாத்தியமானது. அப்படி படத்தின் ஆன்மாவாக இருந்த அவரது இசை படைப்புக்கு விருதுகள் பரிசீலிக்கப்படாததை நான் அவமானமாக நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்