தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ், சில தினங்களுக்கு முன்னர் மாரடைப்புக் காரணமாக காலமானார். அவரின் திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் பெசண்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
சோகத்திலேயே பெரும் சோகம் புத்திரசோகம் என்று சொல்வார்கள். தன் மகன் சாவைப் பார்ப்பது எந்தவொரு தந்தைக்கும் நேரக் கூடாத சோகம். அப்படி ஒரு துயரம் பாரதிராஜாவுக்கு நடந்துள்ளது. இந்நிலையில் பாரதிராஜாவின் நீண்டகால நண்பரும் இசையமைப்பாளருமான இளையராஜா இந்த இறப்புக்கு நேரில் சென்று துக்கம் தெரிவிக்கவில்லை என்பது விமர்சனங்களை எதிர்கொண்டது.
மனோஜ் இறந்த செய்தி அறிந்ததும் ஒரு வீடியோ வெளியிட்ட இளையராஜா, அதன் பின்னர் திருவண்ணாமலையில் மனோஜுக்காக மோட்ச தீபம் ஏற்றி பிராத்தனை செய்தார். இந்நிலையில் நேற்று அவர் பாரதிராஜாவின் இல்லத்துக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளதாக பத்திரிக்கையாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.