மதயானை கூட்டம், இராவண கூட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் விக்ரம் சுகுமாரன் திடீரென மாரடைப்பால் காலமானதாக வெளியாகியுள்ள செய்தி, திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான மதயானை கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன் என்பதும், அதற்கு முன்பு வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மதயானை கூட்டம் வெற்றிக்கு பிறகு, அவர் ஆறு ஆண்டுகள் கழித்து சாந்தனு பாக்யராஜ் நடித்த இராவண கூட்டம் என்ற படத்தை இயக்கினார் என்பதும், அந்த படம் சுமாரான வெற்றியை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று மதுரை சென்ற விக்ரம் சுகுமாரன், தயாரிப்பாளர் ஒருவரிடம் கதை கூறிவிட்டு, பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து அவர் பேருந்து நிலையத்திலேயே மரணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.