உலகம் முழுவதும் படத் தயாரிப்பு முறைகள் தற்போது மாறி வருகின்றன. தயாரிப்பாளர் கிடைக்காத அறிமுக இயக்குனர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோரின் உதவியால் கிரவுட் பண்டிங் மூலமாக சிறிய பட்ஜெட்டில் படங்களை எடுப்பது தற்போது அதிகமாகியுள்ளது. அப்படி எடுத்த லூசியா உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்று பல இளம் இயக்குனர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளன.
அந்த வகையில் இளம் இயக்குனர் இராம் இந்திரா தனது நண்பர்கள் துணையோடு சிறிய பட்ஜெட்டில் சுயாதீனப் படமாக எடுத்துள்ள மனிதர்கள் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ரிலீஸுக்கு முன்பே இந்த படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு நிலவியது. திரையுலகின் பல முன்னணிக் கலைஞர்கள் இந்த படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர் ஆகியவற்றை வெளியிட்டுப் பாராட்டியிருந்தனர்.
குடிபோதையில் சண்டைபோட்டுக்கொள்ளும் நண்பர்களில் ஒருவர் எதிர்பாராத விதமாக இறந்துவிட அவரது சடலத்தை புதைப்பது என முடிவெடுத்து நண்பர்கள் ஐவர் காரில் புறப்படும் ஒரு இரவுப் பயணம்தான் மனிதர்கள் படத்தின் கதை. முதல் காட்சியிலேயே கதையை ஆரம்பித்து விறுவிறுப்பாகக் கதையை சொல்ல ஆரம்பித்த இயக்குனர் அதன் பின்னர் தடம் மாறிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.
ஒரு கட்டத்துக்கு மேல் நடக்கும் சம்பவங்கள் கதையை முன்னகர்த்தி செல்லும் விதமாக தனித்தனியாக கோர்வையில்லாமல் துண்டு துண்டானக் காட்சிகளாக கடந்து சென்றுவிடுகின்றன. இதுபோன்ற கதைகளில் மையக் கதாபாத்திரங்கள் அந்த பயணத்தில் அடையும் மனப்போராட்டங்கள், சந்திக்கும் நபர்கள் அவர்கள் மூலமாக உருவாகும் புரிதல் ஆகியவை மிகவும் முக்கியமானவையாக இருக்கவேண்டும். ஆனால் இந்தக் கதையில் அப்படி அமையாமல் போனது க்ளைமேக்ஸ் காட்சியின் போது ஏற்பட வேண்டிய தாக்கம் இல்லாமல் போய்விட்டது.
இதன் காரணமாக சிறப்பான நடிப்பு, ஒளிப்பதிவு ஆகியவை இருந்தும் படம் முழுத் திருப்தி அளிக்காத ஒன்றாக அமைந்துவிட்டது. இயக்குனர் கதையை சுவாரஸ்யமாக சொல்வதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ஒரு சிறப்பான படமாக அமைந்திருக்கும்.