நான் உண்மையாக இருப்பதால்தான்…. என் குரலை மட்டும் கேட்கிறேன் –சந்தீப்புக்கு தீபிகா படுகோன் சூசக பதில்!

vinoth

வியாழன், 29 மே 2025 (13:32 IST)
அர்ஜுன் ரெட்டி மற்றும் அனிமல் படங்களின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா அடுத்து பிரபாஸை வைத்து ‘ஸ்பிரிட்’ படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க தீபிகா படுகோன் ஒப்பந்தம் ஆனார். ஆனால் தற்போது ஸ்பிரிட் படத்தில் இருந்து அவர் விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இயக்குனர் சந்தீப்புடன் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாகவே தீபிகா வெளியேறியதாக சொல்லப்படுகிறது. அவருக்குப் பதில் திரிப்தி டிம்ரி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் சந்தீப் ரெட்டியின் ட்வீட் ஒன்று இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அதில் “நான் ஒரு கதையை உங்களிடம் சொல்கிறேன் என்றால் 100 சதவீதம் உங்களை நம்புகிறேன். அதனால் அதை வெளியில் பகிரக்கூடாது என்பது எழுதப்படாத விதி. ஒரு இளம் நடிகரை அசிங்கப்படுத்துவது மற்றும் என் கதையில் மாற்றங்கள் செய்வது?  இதுதான் உங்கள் பெண்ணியமா? ஒரு இயக்குனராக என் படைப்புகளுக்குப் பின்னால் நான் வருடக் கணக்கில் உழைப்பைப் போடுகிறேன். எனக்கு எல்லாமே சினிமாதான். உங்களுக்கு அது புரியவில்லை. எப்போதும் புரியவும் புரியாது.” என ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த பதிவில் அவர் தீபிகா படுகோன் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் அவரை சாடிதான் பதிவிட்டுள்ளதாக கருத்துகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தீபிகா படுகோன் பேசியுள்ள கருத்துகள் மறைமுகமாக சந்தீப்புக்குப் பதிலளிக்கும் விதமாக அமைந்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் தீபிகா பேசும்போது “ நான் எப்போது சமநிலையில் இருப்பதற்குக் காரணம், நான் உண்மையாக இருப்பதுதான். கடினமான சூழல்களை நான் எதிர்கொள்ளும்போது உள்ளிருந்து வரும் குரலைதான் கேட்கிறேன். அந்த குரல் சொல்வதைக் கேட்டு அமைதியான முடிவுகளை எடுக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்