கோவைக் கலவரம் குறித்த திரைப்படத்திற்கு சென்ஸார் போர்டு தடை!

வெள்ளி, 2 நவம்பர் 2018 (15:18 IST)
1997 ஆம் ஆண்டு நடைபெற்ற கோவை குண்டு வெடிப்பு சம்மந்தமான படத்திற்கு சென்ஸார் போர்டு தடை விதித்துள்ளது.

1997 ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் நடந்த கலவரம் மற்றும் குண்டுவெடிப்பு சம்பவங்களை மையப்படுத்தி உருவாகியிருக்கிறது, தெளிவிப்பாதையின் நீச தூரம் என்ற சுயாதின திரைப்படம். இந்த திரைப்படத்தில் `மதுபானக்கடை' இயக்குநர் கமலக்கண்ணன், ரோகினி, சார்லஸ் வினோத், ராஜேஷ் பாலச்சந்திரன் எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். பரவலானப் பாராட்டைப் பெற்ற இந்த திரைப்படத்தைப் பொதுமக்கள் பார்வைக்காகக் கொண்டு செல்லும் பொருட்டு அதன் இயக்குனர் தணிக்கைத்துறைக்கு அனுப்பியுள்ளார்.

தணிக்கைத்துறையால் இந்த திரைப்படம் தடைசெய்யபட்டதை அடுத்து தணிக்கைத்துறையின் மறு ஆய்வுக்குழுவுக்கு அனுப்பினார். தற்போது அங்கேயும் இந்தப் படம் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த தடை குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த படத்தின் இயக்குனர் அரவிந்த் ‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக ஒரு படத்தை எடுத்து அதில் மக்களின் வலியைப் பதிவு செய்தால் அதை எப்படியாவது தடை செய்வோம் என அரசு திரும்ப திரும்ப நம்க்கு சொல்லுகிறது. ஆனால் எதற்காகவும் நாங்கள் எங்கள் போராட்டத்தை நிறுத்த மாட்டோம். இந்த படம் மக்களை சென்றடையும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.’ என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்