“விஷாலை நடிகனாக்கியது நான் தான்” - ‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுன்

வெள்ளி, 18 மே 2018 (15:42 IST)
‘விஷாலை நடிகனாக்கியது நான் தான்’ என ‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
 
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீஸான படம் ‘இரும்புத்திரை’. விஷால் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், வில்லனாக அர்ஜுன் நடித்துள்ளார். சமந்தா, ஹீரோயினாக மனநல மருத்துவர் வேடத்தில் நடித்துள்ளார்.
 
இந்தப் படத்தின் வெற்றி விழாவில் பேசிய அர்ஜுன், “இந்தப் படத்தைப் பற்றி எல்லோரும் பாசிட்டிவாக எழுதியதற்கும், என்னுடைய கதாபாத்திரத்தைப் பற்றி நல்ல விமர்சனங்கள் கொடுத்ததற்கும் நன்றி. நானும், விஷாலுடைய தந்தையும் நண்பர்கள். அவர்தான் விஷாலை எனக்கு அறிமுகம் செய்துவைத்து, என்னிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக சேர்த்துவிட்டார்.
 
விஷால், என்னிடம் இயக்கம்தான் கற்க வந்தார். ஆனால், ஒருமுறை வேறு ஒரு நடிகருக்குப் பதிலாக விஷாலை ஒரு காட்சியில் நடிக்க சொன்னேன். விஷாலும் ட்ரையலுக்காக அதில் நடித்தார். அதைப் பார்த்ததும், விஷாலை நடிகராக்க வேண்டும்
என்று எனக்குத் தோன்றியது. அதை நான் விஷாலுடைய தந்தையை சந்திக்கும்போது கூறினேன்.
 
அவரும் விஷாலை வைத்து ‘செல்லமே’ படத்தைத் தயாரித்தார். படம் வெற்றி பெற்றது. நான் சொன்னது போலவே விஷால் இன்று வெற்றிகரமான ஹீரோவாக, தயாரிப்பாளராக, நடிகர் சங்க பொதுச் செயலாளராக மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக உள்ளார். சந்தோஷமாக உள்ளது. இன்று அவருடைய படத்தில், அவருக்கு வில்லனாக நடித்துள்ளேன்.
 
நான் ‘ஜென்டில்மேன்’ படத்தில் நடிக்கும்போது, ஷங்கர் புதுமுக இயக்குநர்தான். அதேபோல் திறமையான இயக்குநராக மித்ரன் வருவார்” என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்