முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான தர்பார் திரைப்படம் படுதோல்வி படமாக அமைந்தது. அதனால் மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இடைவேளை எடுத்துக் கொண்டார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் சல்மான் கான் மற்றும் ராஷ்மிகா ஆகியோரை வைத்து அவர் இயக்கிய சிக்கந்தர் படமும்ம் படுதோல்வியாக அமைந்தது. இதனால் அவர் உடனடியாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
அதையடுத்து இப்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி என்ற படத்தை இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த், வித்யுத் ஜமால் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன. படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதற்காகப் படத்தை ப்ரமோட் செய்யும் பணிகளில் முருகதாஸ் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிப் படங்கள் 1000 கோடி ரூபாய் வசூலை எட்டிவிட்டன. ஆனால் ஏன் இன்னும் தமிழ்ப் படங்கள் அந்த சாதனையை செய்யவில்லை என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த முருகதாஸ் “மற்ற மொழிகளில் எல்லாம் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டும் படங்கள் பண்ணுகிறார்கள். ஆனால் தமிழில் படங்களின் மூலம் தமிழ் இயக்குனர்கள் கற்பிக்கிறார்கள். அதுதான் மற்ற மொழி படங்களுக்கும் தமிழ்ப் படங்களுக்கும் உள்ள வித்தியாசம்”எனக் கூறியுள்ளார்.