முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான தர்பார் திரைப்படம் படுதோல்வி படமாக அமைந்தது. அதனால் மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இடைவேளை எடுத்துக் கொண்டார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் சல்மான் கான் மற்றும் ராஷ்மிகா ஆகியோரை வைத்து அவர் இயக்கிய சிக்கந்தர் படமும்ம் படுதோல்வியாக அமைந்தது. இதனால் அவர் உடனடியாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
அதையடுத்து இப்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி என்ற படத்தை இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த், வித்யுத் ஜமால் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன. படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதற்காகப் படத்தை ப்ரமோட் செய்யும் பணிகளில் முருகதாஸ் ஈடுபட்டு வருகிறார்.
அப்படி ஒரு நேர்காணலில் தன்னுடைய படங்களில் இரண்டாம் பாகம் எடுக்க எது சரியானக் கதை என்பதற்குப் பதிலளித்துள்ளார். அதில் “என்னுடைய கதைகளில் துப்பாக்கி படத்துக்குதான் இரண்டாம் பாகம் எடுத்தால் சரியாக இருக்கும். நான் அந்த கதையை அப்படிதான் திட்டமிட்டுதான் முடித்தேன். கதை பாதியிலேயே ஜெகதீஷ் கதாபாத்திரம் விடுமுறை முடிந்து இராணுவத்துக்கு செல்வதோடு முடிந்துவிடும்” எனக் கூறியுள்ளார்.