தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். தன்னுடைய பட சம்மந்தமான விளம்பர நிகழ்ச்சிகளில் கூட அவர் கலந்துகொள்வதில்லை. ஆனாலும் அவரது படங்களுக்கு மிகப்பெரிய அளவில் ஓப்பனிங்கும் வசூலும் கிடைக்கின்றன. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்துள்ளது. 250 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்கம் மூலமாக வசூல் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.
அஜித் – ஆதிக் கூட்டணி வெற்றிகரமான கூட்டணியாக அமைந்ததால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார் என்றும் அதை ரோமியோ பிக்சர்ஸ் சார்பாக ராகுல் தயாரிக்கவுள்ளார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மற்ற எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் குறித்துத் தெரிவித்துள்ள கருத்து கவனம் ஈர்த்துள்ளது. அதில் “நான் இப்போது இருக்கும் உயரத்துக்குக் காரணம் அஜித் சார்தான். ஒருவர் ஜீரோவில் இருக்கும் போது நம்பலாம். ஆனால் நெகட்டிவ்வில் இருக்கும்போது நம்புவது என்பது நடக்காதது. ஆனால் அஜித் சார் என்னை நம்பினார். எல்லோராலும் அப்படி இருக்க முடியாது. அஜித் சார் எனக்குத் தந்தை போன்றவர்” எனப் பேசியுள்ளார்.