நடிகர்கள் விஜய் சேதுபதி & சூரி ‘விடுதலை பார்ட் 2’ படத்திற்கான டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளனர்!

J.Durai

வெள்ளி, 11 அக்டோபர் 2024 (10:33 IST)
நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகியோர்கள் சென்னையில், 'விடுதலை பார்ட்2' படத்திற்கான டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளனர் என்பதை இயக்குநர் வெற்றிமாறன் மகிழ்ச்சியாக அறிவித்துள்ளார்.
 
இதுகுறித்து படக்குழு பகிர்ந்து கொண்டதாவது......
 
திரைப்படங்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கும்போது, அதன் கதை சொல்லலுக்கு ஆத்மார்த்தமான உயிர் கொடுப்பது டப்பிங்தான். இருப்பினும், 'விடுதலை பார்ட்2' படத்தின் டப்பிங் தொடங்குவதற்கு முன்பே படத்தின் அழகையும் ஆன்மாவையும் எங்களால் உணர முடிந்தது. படத்தின் இறுதி வெளியீட்டை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம். விரைவில், இந்தப் படத்தைப் பார்வையாளர்களும் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறோம் என்றனர்.
 
'விடுதலை பார்ட் 1'  படத்தின் அமோக வெற்றியைத் தொடர்ந்து 'விடுதலை பார்ட் 2'  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறனின் தலைசிறந்த இயக்கம், சூரியின் அற்புதமான நடிப்பு, விஜய் சேதுபதியின் திரை இருப்பு, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என இவை அனைத்தும் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில், நடிகை மஞ்சு வாரியர் விஜய் சேதுபதியுடன் முக்கிய காட்சிகளில் இணைந்து நடித்துள்ளார். அவரின் திறமையான நடிப்பு கதைக்கு இன்னும் ஆழத்தையும் தீவிரத்தையும் சேர்த்துள்ளது. கூடுதலாக, நடிகர்கள் அனுராக் கஷ்யப் மற்றும் கிஷோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். படத்தின் முதல் பாகம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றியைப் பெற்றது. அதன் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்புகள் இப்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
 
இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் படத்தை டிசம்பர் 20, 2024 அன்று வெளியிட இலக்கு வைத்துள்ளனர்.
 
'விடுதலை பார்ட் 2' படத்தில் நடிகர்கள்  
விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கிஷோர், அனுராக் காஷ்யப், கென் கருணாஸ், ராஜீவ் மேனன், கவுதம் வாசுதேவ் மேனன், போஸ் வெங்கட், பவானி ஸ்ரீ, வின்சென்ட் அசோகன், சேத்தன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்