சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்கினால்....?

வியாழன், 2 செப்டம்பர் 2010 (15:37 IST)
கிரிக்கெட் ஆட்டம் எப்போதும் இல்லாத நெருக்கடியை சந்தித்துள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் வீரர்கள் தற்போது சிக்கியுள்ள சூதாட்டப் புகார் பெருமளவு விவாதங்களையும், கருத்துக்களையும் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக உருவாக்கி வருகின்றன.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள விசாரணை நீதிமன்ற நீதிபதி ஒருவர் விளையாட்டில் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்குமாறு பரிந்துரை செய்துள்ளார். அதற்கு அவர் கூறும் காரணம் வருமாறு:

"கிரிக்கெட்டிலும், பிற விளையாட்டுகளிலும் சூதாட்டம் இப்போது பெருமளவு இருந்து வருகிறது என்பதைக் காண தெய்வீகக் கண்கள் தேவையில்லை. அதிலிருந்து பெருகும் பணம் போதை மருந்து கடத்தல், பயங்கரவாத நடவடிக்கைகள் ஆகியவற்றை நோக்கி திருப்பப்படும் நாட்கள் அதிக தூரம் இல்லை. இதனால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்தக் குற்றத்தை சட்டபூர்வமாக்கி அதனை அரசுகள் கண்காணிக்க வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது." என்கிறார்.

இவரது இந்த 'கவலை' யில் ஒரு அர்த்தம் இருப்பதாக நாம் எடுத்துக் கொண்டாலும், அதற்கு ஒரு குற்றத்தை சட்டபூர்வமாக்கிவிட்டால் அது தீர்ந்து விடும் என்பதற்கு வரலாற்றில் எந்த வித ஆதாரமும் இல்லை.

இது போன்ற சிந்தனை ஒரு பெரிய விஷயமாக சிறிது காலமாகவே பல்வேறு தரப்பிலும் சொல்லப்படுகிறது. உதாரணமாக சுதந்திர இந்தியாவின் பலதரப்பட்ட லஞ்சம், கறுப்புப் பணம் எனும் பூதம். இவற்றை ஒழிக்க லஞ்சத்தையும் சட்டபூர்வமாக்குவது நல்லது என்பது போன்ற கருத்துகளும் சில காலம் உலாவந்தன. இன்னும் சிலர் இது போன்ற கருத்துக்கள் சரியே என்றும் கருதுகின்றனர்.

இந்த பரிந்துரைகளை நாம் சற்றே விரிவுபடுத்திப் பார்த்தால் அது நகைச்சுவையான பிற முடிவுகளுக்கும் இட்டுச் செல்லும். நாட்டில் கற்பழிப்பு, திருட்டு, கொள்ளை, கொலை என்று பல விதங்களில் குற்றங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளன. இதனையெல்லாம் ஒழிக்கவும் நாம் இதே சட்டபூர்வமாக்கும் சிந்தனையை செலுத்தினால் என்ன ஆகும்? யோசிக்கவஅபாயமாகவ உள்ளது அல்லவா?

முதலில் குற்றங்கள் என்பதே சட்டத்தை மீறுவது, சட்ட விரோதமானதஎன்பதனால் உருவாவதே, இவையெல்லாம் கூடாது, இவையெல்லாம் சரி மற்றவையெல்லாம் தவறு அல்லது குற்றம் என்று நாம் சட்டம் செய்திருப்பதே அதனை ஒழித்துக் கட்டத்தான். அதில் தோல்வி கண்ட ஒரு அரசு அல்லது ஒரு அமைப்பை சரி செய்ய முயலாமல் மீண்டும் குற்றத்தை சட்டபூர்வமாகச் செய்து விட்டால் அது எவ்வாறு தீர்வாகும்?

எதனை மதியாது மீறல்கள் நடைபெறுகிறதோ அந்த மீறல்களையே சட்டபூர்வமாக்கி விட்டால் அது எவ்வாறு குற்றங்களை ஒழிப்பதாகும். அப்படியே அரசாங்கங்கள் தீவிரமாக கண்காணித்து விட்டால் இது குறைந்து விடும் என்பது இன்னுமொரு மாயத்தோற்றமே. அரசாங்கம் என்பது மனிதர்களற்ற வெறும் சட்டதிட்டங்கள் மட்டும் அல்ல. அங்கு தனி நபர்கள், குழுக்கள், அதன் நலன்கள், அதிகாரப் பிரயோகம், துஷ்பிரயோகம் அனைத்தும் உள்ளது. இவையெல்லாம் நாம் சட்டபூர்வமாக்கம் செய்யும் அந்த விஷயங்களிலும் மேலும் திறம்பட சில மீறல்களைச் செய்ய வைக்கும். அப்போது கண்டுபிடிக்கவே முடியாத அளவுக்கு அதனைச் சுற்றி ஆட்சியதிகார அமைப்புகள் சுற்றி மூடியிருக்கும். இன்னும் குற்றங்களை மறைக்கவும் அது ஓரளவுக்குக் கூட மக்களுக்கு தெரிந்து விடக்கூடாது என்ற போக்கும்தான் மலிந்து விடும்.

கடந்த ஆண்டு ஐ.ி.எல். கிரிக்கெட்டில் மட்டும் ரூ.20,000 கோடி சூதாட்டப்பணம் புழங்கியுள்ளது என்று ஒரு அறிக்கை கூறுகிறது. டெல்லியில் மட்டும் 2000 - 3000 சூதாட்டக்காரர்கள் திறம்பட சட்ட விரோத சூதாட்டத்தை நடத்தியுள்ளனர் என்று இதே நீதிபதிதான் கூறுகிறார். ஆனால் காவல்துறைக்குத் தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை என்று மிகச்சரியாகவே கூறும் அந்த நீதிபதி அதற்காக காவல்துறையைக் கடிந்துள்ளார்.

காவல்துறை என்ற அமைப்புத்தான் முழுக்க முழுக்க ஊழல் மயமாகியுள்ளதே! மீண்டும் அரசாங்கம் இதனை கண்காணிக்கவேண்டும் என்றால் அது எந்த அரசாங்கம்? இப்போதுள்ள காவல்துறை என்ன அரசுக் கட்டுப்பாட்டில் இல்லாமல் தன்னிச்சையாக இயங்கும் தனியார் அமைப்பா?

இந்தியாவின் சூதாட்டச் சந்தை ஆண்டொன்றிற்கு சுமார் 60 பில்லியன் (1பில்லியன் = 100 கோடி) டாலர்கள் மதிப்புடையது, ஆனால் இதில் பாதி சட்டவிரோத சூதாட்டமே நடைபெறுகிறது.

சூதாட்டத்தை அடிப்படையாகக் கொண்டு எந்த ஒரு சமூகமும், பொருளாதாரமும் நிலைபெற்றதாக வரலாறு இல்லை. லாட்டரி சீட்டுகள் இன்னமும் பல மாநிலங்களில் சட்டபூர்வமானதுதான், ஆனால் அதில் நடைபெறும் ஊழல்கள் எண்ணற்றவை. முதல் பரிசு என்று அவர்கள் அறிவிக்கும் தொகையை பெற்ற நமக்குத் தெரிந்தவர்கள் என்று யாரேனும் இருந்தால் கூறலாம் இது குறித்து வேண்டுமானால் நாம் பந்தயம் கட்டலாம்!

நாம் நம் வாழ்நாளில் சில தருணங்களில் இந்த சூதாட்டம் என்பதன் ஒரு சாதாரண வடிவத்தைக் கண்டிருப்போம், தெருவோரங்களில் நாம் கேரம் போர்டு அல்லது செஸ் அல்லது கோலி குண்டு ஆட்டங்களைக் கண்டிருக்கலாம்.

இருவர் விளையாடினால் அருகில் இருக்கும் இருவர் யார் வெற்றி பெறுவார் என்றோ அல்லது அந்த குறிப்பிட்ட காயை அந்த குறிப்பிட்ட நபர் பாக்கெட்டுக்குள் அடிப்பார் அல்லது அடிக்க மாட்டார் எவ்வளவு பெட்? என்று கூறிகொண்டு சில தொகைகளை பந்தயமாகக் கட்டி விளையாடுவது சில இடங்களில் மிகவும் சகஜமான ஒரு வாழ்க்கை நிலை.

இது எப்போது அபாயம் என்றால் பெட் கட்டுபவர்கள் ஆடுபவர்களை சரி கட்டத் துவங்கும்போதுதான். அதுதான் பெரிய அளவில் பணம் புழங்கும், பெரிய பெட்டிங் நிறுவனங்கள் ஈடுபடும் விளையாட்டுப் போட்டிகளில் நடைபெறுகிறது.

இதில் அதனை சட்டபூர்வமாக்கி நாம் என்ன தீர்வு காண முடியும்? பிரச்ச்னை இப்போது பெட்டிங்கில் எவ்வளவு பணம் புழங்குகிறது அந்தப் பணம் எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பதல்ல. அது முற்றிலும் வேறு ஒரு சட்டரீதியான கண்காணிப்புக்குட்படுத்த வேண்டியது என்பதை நாம் மறுக்கவில்லை.

ஆனால் கிரிக்கெட், கால்பந்தாட்டம், ஹாக்கி இன்னபிற திறனை வெளிப்படுத்தும் விளையாட்டுகளில் புகுந்து விளையாடி வீரர்களை பணத்தாசை, பெண்ணாசைக் காட்டி பணத்தைக் குவிக்கும் சூதாட்டக்காரர்கள், மற்றும் நிறுவனங்கள்தான் இப்போது நம் பிரச்சனை.

மனிதனின் ஆதி இயல்பூக்கங்களை, (அது மூளை சார்ந்ததாக இருந்தாலும் உடல் சார்ந்ததாக இருந்தாலும் சரி) ஒரு குறிப்பிட்ட விதிமுறைகளுக்குட்பட்டு திறனாக வெளிப்படுத்துவதுதான் விளையாட்டு என்பது. இதில் திறமையையும் பணம் வந்து விழுங்கும் என்றால் அதனைத் தடுக்க சட்டமாக்கல்கள் மட்டும் போதுமானதாகுமா?

நாம் வாழும் இன்றைய உலகமயமாதல் காலக்கட்டத்தில் மனிதனை மழுங்காமல் இருக்கச் செய்வது விளையாட்டிற்கும் பெரும் பங்கு உண்டு. அது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது ஒரு பண்பாடு. இதில் விளையாட முடியாத, விளையாட்டில் தங்கள் உடலை ஈடுபடுத்த முடியாத பண முதலைகள் புகுந்து கெடுப்பது என்பது விளையாட்டை மட்டும் கெடுப்பதல்ல, பண்பாட்டையும் கெடுப்பது ஆகும்.

எனவே டெல்லி விசாரணை நீதிமன்ற நீதிபதியின் சூதாட்டச் சட்டமாக்கல் பரிந்துரை எந்த விதத்திலும் இந்தத் தீமையைக் களைய உதவாது.

வெப்துனியாவைப் படிக்கவும்