நிறவெறித் தாக்குதல் பேச்சு – சர்பராஸுக்கு ஆதரவாக முன்னாள் கிரிக்கெட் வீரர் !

புதன், 30 ஜனவரி 2019 (08:40 IST)
நிறவெறித் தாக்குதோடு தென் ஆப்பிரிக்க வீரரை திட்டிய பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அஹமதுக்கு ஆதரவாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் குரல் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த ஒருநாள் போட்டியில் விக்கெட் கீப்பிங் பணியில் இருந்த சர்பராஸ் தென் ஆப்பிரிக்கா வீரர் பெலுக்வயோவை நோக்கி ‘ “ஏய் கருப்பா, உன்னுடைய அம்மா எங்கே? உனக்காக பிரார்த்தனைச் செய்ய கூறினாயா என்ன?’ எனக் கூறினார். இந்த அறுவறுக்கத்தக்க அவரது நிறவெறித் தாக்குதல் பேச்சு ஸ்டம்ப் மைக்கின் மூலமாக வெளியேக் கேட்டு சர்ச்சைகளைக் கிளப்பியது.

இதனால் ஐசிசி நிறவெறித்தடை விதிமுறையின் கீழ் சர்பராஸுக்கு  4 போட்டிகளில் விளையாடத்  தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்காவில் இருந்து அவரை பாகிஸ்தான் திரும்புமாறு  அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கூறிவிட்டது.

சர்பராஸின் இந்த நடவடிக்கைக் குறித்தும் அதற்கு ஐசிசி மற்றும் பாக். கிரிக்கெட் வாரியத்தின் எதிர்வினைக் குறித்தும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ‘சர்பராஸ் நிறவெறியுடன் பேசியது தவறுதான், ஆனால் உலகமெங்கும் உள்ள பாகிஸ்தான் மக்கள் இதனை ஊதிப்பெருக்கி மிகப்பெரிய விவகாரமாக்கி விட்டனர். நான் அவரை ஆதரிக்கக் காரணம் அவர் இன்னும் கற்றுக்கொள்ளும் வீரர்தான். இந்த சம்பவத்திற்குப் பிறகு அவர் முதிர்ச்சியடைவார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சிறப்பாக வழிநடத்துவார். அதனால் அவரைக் கேப்டன் பதவியில் இருந்து நீக்குவது அவசியமற்றது. தற்போது மாலிக் கேப்டனாக செயல்பட்டாலும் அவர் உலகக்கோப்பைக்குப் பின் ஓய்வு பெறப்போகிறார். அதனால் நமக்கு நீண்டகாலக் கேப்டன் தேவை. அதற்கு சர்பராஸ்தான் சரியான நபர். அவரை தென் ஆப்பிரிக்காவில் திரும்ப அழைத்திருக்கக் கூடாது. தடை முடிந்த பின் நடக்கும் டி 20 போட்டியில் அவரை விளையாட வைத்திருக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்