312 பதக்கங்களை வாரி குவித்த இந்தியா! – புதிய சாதனை!

புதன், 11 டிசம்பர் 2019 (12:43 IST)
நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற இந்தியா பல்வேறு போட்டிகளில் 312 பதக்கங்கள் வென்று புதிய சாதனை படைத்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தா, நேபாளம் உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கு இடையே நடைபெறும் தெற்காசிய விளையாட்டு போட்டிகள் நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்றது. இந்தியா சார்பில் கலந்து கொண்ட 487 வீரர்களையும் சேர்த்து 2715 வீரர்கள் இந்த விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர்.

விளையாட்டு போட்டிகள் ஆரம்பித்த நாள் முதலே பல்வேறு பதக்கங்களை வென்று வந்த இந்தியா நேற்றைய இறுதி போட்டியிலும் 10 தங்கம், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கங்களையும் கைப்பற்றியது.

பெண்கள் குத்துச்சண்டையில் வீராங்கனை பிங்கி ராணி நேபாள வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்றார். கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவு இலங்கையையும், பெண்கள் பிரிவு நேபாளத்தையும் தோற்கடித்து இரட்டை தங்கம் வென்றது. மேலும் ஜூடோ மற்றும் ஸ்குவாஷ் போட்டிகளிலும் இருபால் அணியினரும் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றனர்.

10 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டிகளில் இந்தியா 174 தங்கம், 93 வெள்ளி, 45 வெண்கலம் என மொத்தம் 312 பதக்கங்களை வென்று தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்