போட்டியின் இடையே திடீரென மரணம் அடைந்த நடுவர்!

செவ்வாய், 21 மே 2019 (07:56 IST)
பொலிவியா  நாட்டில் கால்பந்து விளையாட்டு போட்டியின்போது திடீரென நடுவர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
பொலிவியா  நாட்டில் எல்அட்லா என்ற பகுதியில் உள்ள முனிசிபல் மைதானம் ஒன்றில் உள்ளுர் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டிகள் நடந்தன. இந்த மைதானம் கடல் மட்டத்தில் இருந்து 12.795 அடி உயரத்தில் உள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த போட்டிக்கு நடுவராக பணியாற்றிய 31 வயது விக்டர் ஹ்யூகோ என்பவர் ஆட்டத்தின் 47வது நிமிடத்தில் திடீரென மைதானத்தின் நடுவில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சையின் பலனின்றி அவர் மரணம் அடைந்தார். ஏற்கனவே இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் மைதானத்தில் மயங்கி விழுந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
விக்டர் ஹ்யூகோ மரணத்திற்கு பொலிவியா நாட்டின் அதிபர் எவோ மோரல்ஸ் தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடைய இழப்பிற்கு தான் மிகவும் வருந்துவதாகவும், அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் அதிபர் தெரிவித்துள்ளார். இந்த போட்டியின் 47வது நிமிடத்தின்போது ஒரு அணி 5-0 என்ற முன்னிலையில் இருந்தபோதும் விக்டரின் மரணத்தால் போட்டி நிறுத்தப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்