2021- பிபிசி இந்திய வீராங்கனை விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டோர் பட்டியல் வெளியீடு

திங்கள், 8 பிப்ரவரி 2021 (18:44 IST)
2021ஆம் ஆண்டுக்கான பிபிசி இந்திய வீராங்கனை விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டோர்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
 
இந்த ஆண்டுக்கான சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனைக்கான விருதுக்கு தேர்வு பரிந்துரை செய்யப்பட்டுள்ள 5 வீராங்கனைகளின் இறுதிப் பட்டியலை டெல்லியில் இன்று நடந்த மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பிபிசி நியூஸ் அறிவித்துள்ளது.

 
புகழ்பெற்ற விளையாட்டு செய்தியாளர்கள், துறை வல்லுநர்கள் மற்றும் பிபிசி ஆசிரியர் குழுவினரால் இந்தப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
 
 
பொதுமக்கள் பங்கேற்பதற்காக, இதற்கான வாக்கெடுப்பு தற்போது தொடங்கியுள்ளது.
 
பிபிசி ஸ்போர்ட்ஸ் இணையதளத்திலும், பிபிசியின் இந்திய மொழி சேவைகளின் தளங்களுக்கும் சென்று பொதுமக்கள் வாக்களிக்கலாம். 
 
 
விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட 5 போட்டியாளர்கள்:
 
டூட்டி சந்த்,  விளையாட்டு: தடகளம் 
கோனேரு ஹம்பி, விளையாட்டு: செஸ் 
மனு பாக்கர், விளையாட்டு: ஏர் கன் சுடுதல் 
ராணி, விளையாட்டு: ஹாக்கி 
வினேஷ் போகாட், விளையாட்டு: ஃப்ரீஸ்டைல்  மல்யுத்தம்
 
"இந்த நிலையற்ற காலங்களில் ஆட்டத்தின் போக்கையே மாற்றிய, சிறந்த பெண் விளையாட்டு நட்சத்திரத்திற்கு வாக்களித்து, இந்த ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த பெண் விளையாட்டு வீராங்கனை விருது பெறுபவரைத் தேர்வு செய்வதில் உலகெங்கிலுமுள்ள மக்களின் பங்கேற்பை எதிர்நோக்கி உள்ளேன்," என்று பிபிசியின் இந்திய மொழிகள் சேவையின் தலைவர் ரூபா ஜா தெரிவித்துள்ளார்.
"இந்த கௌரவம் மிக்க விருதின் இரண்டாம் ஆண்டை கொண்டாட உள்ளதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். 'ஸ்போர்ட்ஸ் ஹேக்கத்தான்' மற்றும் 'இந்தியன் சேஞ்மேக்கர் சீரீஸ்' ஆகியவற்றின் மூலம் திறமைமிக்க, மற்றும் வளர்ந்து வரும் விளையாட்டு வீராங்கனைகளின் இணையதள இருப்பை மேம்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்," என்று பிபிசியின் ஆசியா-பசிபிக் பிராந்தியத்துக்கான தொழில் மேம்பாட்டுப் பிரிவின் தலைவர் இந்து சேகர் சின்கா தெரிவித்தார்.
 
 
இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஐந்து இறுதிப் போட்டியாளர்களும் இதுகுறித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
 
 
டூட்டி சந்த்: "இந்த விருதுக்கான போட்டியாளர்களின் இறுதிப் பட்டியலில் இந்த ஆண்டு மீண்டும் எனது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. இந்திய மக்களிடையே இப்போது விளையாட்டு குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை பார்ப்பது சிறப்பானதாக இருக்கிறது. விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு என்று ஒரு பெயரை உருவாக்கி கொண்டு பொருளீட்டி, நாட்டையும் பெருமைப்பட வைக்கிறார்கள்."
மனு பாக்கர் : "இது என் சொந்த மக்களிடையே இருந்து வரும் பாராட்டு என்பதால் எனக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. என் செயல்திறனை பாராட்டுவது மற்றும் கடின உழைப்புக்கு அங்கீகாரம் தருவது எனக்கு மிகவும் மதிப்புமிக்கது. என் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்."
 
 
கோனேரு ஹம்பி: "இந்த விருதை பெறுவதை விடவும் இதற்கான பரிந்துரை பட்டியலில் என் பெயர் இடம் பெறுவது எனக்கு பெரிய வெற்றியாகும். விளையாட்டில் வெற்றி அல்லது தோல்வி குறித்து சிந்திப்பதை விடவும் போட்டியிடுவதே மிகவும் முக்கியமானது. அதுவும் இத்தகைய பெருந்தொற்று காலத்தில் இது மிகவும் அவசியமானது. பிபிசியின் இந்த ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருது, நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கவும் உலகெங்கிலுமுள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்களுடன் சேர்ந்து கொண்டாடவும் எங்களுக்கு வாய்ப்பை வழங்கும்."

 
ராணி: "பிற தடகள வீரர்களைப் போலவே எங்களது அணியும் இந்தியாவுக்காக ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற கனவுகளுடன் உள்ளது. நாங்கள் இந்தியாவில் 130 கோடி மக்களை ஒலிம்பிக்ஸில் பிரதிநிதித்துவப்படுத்துவோம். பயிற்சி நேரங்களில் எங்களது நூறு சதவீத உழைப்பை தருகிறோம். எங்களால் மிகச்சிறந்த திறனை வெளிப்படுத்த முடிந்தது என்பதை இறுதியில் நாங்கள் பெருமையுடன் நினைக்கவேண்டும்.தங்களது சாதனைகளுக்காக பெண் தடகள வீரர்கள் அங்கீகரிக்கப்படுவது ஊக்குவிப்பதாக இருக்கிறது. தங்கள் உடல்நலம் மற்றும் மனநலத்திற்காக அனைத்து பெண்களும் குறைந்தது ஒரு விளையாட்டையேனும் தேர்ந்தெடுத்து விளையாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்."

 
வினேஷ் போகாட்: "மல்யுத்தத்தைக் கீழானதாக பார்த்து 'பெண்களை என்ன செய்ய வைக்கிறீர்கள்' என்று எங்கள் ஊரில் உள்ளவர்கள் இதற்கு முன்பு கேள்வி எழுப்பினார்கள். ஆனால் இப்பொழுது பெண் குழந்தைகள் பிறந்தால் ஒரு பிரச்சனை இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களை மல்யுத்த வீராங்கனையாக மாற்றுவோம் என்று கூறுவதுடன் மட்டுமல்லாமல் அதை உண்மையாகவும் செய்கிறார்கள். எங்களது பதக்கங்கள் மூலம் இந்த மாற்றத்தை நாங்கள் கொண்டுவந்தோம். பெண் குழந்தைகளின் வாழ்வில் எங்களால் மாற்றத்தைக் கொண்டுவர முடியுமானால், அது ஒரு பழக்கத்தை விட எந்த வகையிலும் எனக்குக் குறைந்ததல்ல."
 

வாக்களிப்பு குறித்த விவரங்கள்: பொதுமக்கள் பின்வரும் இணைய தளங்களில் இலவசமாக வாக்களிக்கலாம். பிபிசி நியூஸ், பிபிசி இந்தி, பிபிசி மராத்தி, பிபிசி குஜராத்தி, பிபிசி தமிழ், பிபிசி தெலுங்கு.
 
 
இந்திய நேரப்படி பிப்ரவரி 24ஆம் தேதி 23:30 மணிக்கும், கிரீன்விச் நேரப்படி 18:00 மணிக்கும் இந்த வாக்கெடுப்பு நிறைவடையும்.
 
பிபிசியின் இந்த ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதின் வெற்றியாளர் மார்ச் 8ஆம் தேதி அன்று மெய்நிகர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் அறிவிக்கப்படுவார். வாழ்நாள் சாதனையாளர் மற்றும் வளர்ந்து வரும் விளையாட்டு வீரர் ஆகியோருக்கான விருதும் இதன்போது அறிவிக்கப்படும்.

 
பிபிசி ஸ்போட்ஸ் ஹேக்கத்தான் (பிப்ரவரி 18): பிபிசி 'ஸ்போர்ட்ஸ் ஹேக்கத்தான்' எனும் நிகழ்வையும் அறிவித்துள்ளது. இதில் ஆங்கிலம் மற்றும் ஆறு இந்திய மொழிகளில், 50 இந்திய விளையாட்டு வீராங்கனைகள் குறித்த 300 விக்கிப்பீடியா கட்டுரைகள் புதிதாக பதிப்பிக்கப்படும் அல்லது ஏற்கனவே இருப்பவை மேம்படுத்தப்படும். 
 
டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 13 கல்வி நிறுவனங்களில் இதழியல் மாணவர்கள் பிபிசி ஹேக்கத்தான் நிகழ்வில் பங்கேற்பார்கள் . 
 
இந்த நிகழ்வில் என்ன நடக்கும் என்பதை தெரியப்படுத்தும் வகையில் பாரா -பேட்மிட்டன் விளையாட்டு வீராங்கனை மானசி ஜோஷியின் ஆங்கில விக்கிப்பீடியா பக்கம் மேம்படுத்தப்பட்டதுடன்,  இந்தியில் அவருக்கு என்று புதிதாக ஒரு விக்கிப்பீடியா பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இது இன்றைய செய்தியாளர் சந்திப்பில் காட்டப்பட்டது. பிப்ரவரி 18ஆம் தேதி அன்று ஸ்போர்ட்ஸ் ஹேக்கத்தான் நிகழ்வு பிபிசியின் இந்திய மொழிகள் சேவைகளின் சமூக ஊடகங்களில் நேரடியாகக் காட்டப்படும்
தி இந்தியன் சேஞ்ச் மேக்கர்ஸ்: இந்தத் தொடர் வெவ்வேறு இந்திய மாநிலங்களில் இருந்து, தடைகளை மீறி தங்கள் சொந்த முயற்சியால் மாற்றத்தை ஏற்படுத்திய நம்பிக்கையளிக்கும் ஐந்து விளையாட்டு வீராங்கனைகளின் கதைகளை படம் பிடிக்கிறது. இவர்களில் இரண்டு மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனைகளும் அடக்கம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்