கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட தேநீர் இடைவேளைக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா தனது கவனத்தை இழந்தது. இந்திய பேட்டிங்கும், இரண்டாவது இன்னிங்சில் ஹர்பஜன், மிஷ்ரா வீசிய பந்து வீச்சும் இந்திய அணிக்கு முதலிடத்தைத் தக்க வைக்கும் வெற்றியைப் பெற்றுத் தந்தது. ஆனாலும் இந்திய அணியின் பலவீனங்கள் மேலும் நீடித்தால் அது விரைவில் நம்பர் 1 இடத்தை இழந்துவிடும்.
நாம் நாக்பூரில் போராடாமல் சரணடைந்தோம், கொல்கத்தாவில் தென் ஆப்பிரிக்கா கடைசி தினத்தில் தங்கள் போராட்ட குணத்தை நிரூபித்து டிரா செய்வதற்கு மிக அருகில் வந்தனர். இதுதான் இந்திய அணிக்கும் தென் ஆப்பிரிக்கா அணிக்கும் இடையிலான பெரிய வித்தியாசம்.
இந்த வித்தியாசம்தான் இந்திய அணியின் பல பலவீனங்களில் ஒன்று.
சேவாகின் அதிரடி துவக்கம் எப்போதும் எதிரணியினரை நிலைகுலையச் செய்யும் என்பது இப்போது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் நாக்பூரில் அவர்கள் சேவாகை சதம் எடுத்தவுடன் வீழ்த்த முடிந்தது. அது போலவே இந்த டெஸ்ட் போட்டியிலும் நடந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கேட்ச்களைக் கோட்டை விட்டனர். இதுவே அந்த அணியின் தோல்விக்குக் காரணமானது.
டெஸ்ட் தரவரிசையில் ஒன்றாம், இரண்டாம் இடத்தில் இருக்கும் இரு அணிகள், ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் என்று வர்ணிக்கப்பட்ட தொடரில் விளையாடும் போது நாம் என்ன எதிர்பார்ப்போம், ஒன்று தென் ஆப்பிரிக்கா வெல்லும் அல்லது இந்தியா வெல்லும் என்றுதானே?
ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது எனும்போது இரு அணிகளுமே தடுமாற்றங்களும், சீரற்ற போக்குகளையும் கொண்டுள்ளன என்பது தெளிவாகத் தெரிந்தது.
முதலில் முதல் நாள் ஆட்டத்தில் பேட்டிங்கிற்கு சாதகமான ஆட்டக்களம் அமைக்கப்படுவதை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். டாஸ் வென்ற அணி டெஸ்ட் போட்டியை வெல்லும் நிலை நீடிக்கக் கூடாது. கொல்கத்தாவிலும் தேநீர் இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்க்கா 208 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது.
சரிவு ஏற்படவில்லை எனில் அந்த அணி நாக்பூர் போலவே 500 ரன்களுக்கும் மேல் குவித்திருக்கும். அப்போது இந்தியாவின் வெற்றிக் கனவு பொய்த்துப் போயிருக்கக்கூடும்.
முதல் நாள் ஆட்டக்களத்தில் திறமையுடன் பந்து வீசும் அணியாக இந்தியா இல்லை. இது ஒரு மிகப்பெரிய பலவீனம், முதல் நாள் ஆட்டத்தில் இப்போதெல்லாம் ஜாகீர் கான் தவிர மற்ற பந்து வீச்சாளர்கள் குறிப்பாக இஷாந்த் ஷர்மா, ஹர்பஜன், மிஷ்ரா ஆகியோர் கண்டபடி வீசுகின்றனர்.
தோனியின் ஃபீல்டிங் அமைப்பும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஹஷிம் ஆம்லா நல்ல பேட்ஸ்மென் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவரை ஏதோ மகான் வீரர் போல் பாவித்து டீப் பாயிண்ட், டீப் கவர் என்றெல்லாம் ஃபீல்டிங் அமைப்பது ஏன் என்று புரியவில்லை.
கொல்கத்தா டெஸ்டின் கடைசி நாள் ஆட்டத்தில் இன்னமும் 4 ஓவர்களில் ஆட்டம் முடியப்போகிறது என்ற போது அமித் மிஷ்ரா பந்து வீச்சிற்கு தோனி அமைத்த வியூகம் அதிர்ச்சியளிப்பதாயிருந்தது.
மட்டைக்கு அருகே ஒரு ஃபீல்டர் கூட இல்லை! மட்டையைச் சுற்றி 4 அல்லது 5 வீரர்கள் இருக்கும்போதே அவர் பந்தை திறம்பட தடுத்தாடி வந்தார். இந்த நிலையில் அந்த இடங்களில் ஒரு ஃபீல்டர் கூட இல்லாமல் அந்த ஒரு ஓவரை வீசச்செய்த தோனியின் உத்தி என்னவென்று புரியவில்லை.
FILE
கடுமையான நெருக்கடிகளைக் கொடுத்திருந்தால் ஹஷிம் அம்லாவை முன்னதாகவே வீழ்த்தியிருக்கலாம். அதேபோல் ஆட்டம் துவங்கி புதுப் பந்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் போது 2 ஸ்லிப் மட்டுமே நிறுத்துவது அல்லது 3 ஸ்லிப் நிறுத்தி கல்லி இல்லாமல் பந்து வீசுவது போன்ற தவறுகளை தோனி செய்து வருகிறார். 2வது ஸ்லிப்பிற்கும் கல்லியிற்கும் நடுவே ஆம்லா அடித்த பவுண்டரிகளை கணக்கிட்டால் நமக்கு இந்த பலவீனம் தெரியவரும்.
பவுண்டரிகள் பிரச்சனையல்ல, ஆனால் அதில் பல ஷாட்கள் கேட்ச் பிடிக்கும் உயரத்தில் செல்கிறது என்பதுதான் நாம் கவனிக்கத் தவறுவது. மோசமான பந்து வீச்சிற்கு ஒரு போதும் ஃபீல்டிங் வியூகம் அமைக்கக் கூடாது.
செட்-அப் செய்யும் ஃபீல்டிங்கிற்கு பந்து வீச்சாளரை வீசச் செய்வதுதான் கேப்டனின் திறமை. இஷாந்த் ஷர்மா நேற்று தேநீர் இடைவேளை வரை மிக மோசமாக வீசினார். அவரது மோசமான வீச்சிற்கு களம் அமைத்துக் கொடுத்தவர் தோனி. இதனால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணற நேரிட்டது.
பந்து வீச்சு மிகவும் சாதாரணமாக உள்ளது. நேற்று ஓரளவிற்கு ஆட்டக்களம் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக இருந்தது. மேலும் தென் ஆப்பிரிக்கா அணி 347 ரன்கள் பின் தங்கியிருந்த நிலையில் தோல்வியைத் தவிர்க்க போராடும் மன அழுத்தத்தில் இருந்தது, அதனால் வெற்றி வாய்ப்பு ஏற்பட்டது.
தென் ஆப்பிரிக்காவின் நடுக்கள வீரர்களில் டுமினி, டீவிலியர்ஸ், பிரின்ஸ் துவக்கத்தில் கேப்டன் ஸ்மித் என்று ஒருவருமே சரியாக விளையாடவில்லை. இந்தத் தொடரில் பார்த்தால் ஹஷிம் அம்லா, ஜாக் காலிஸ் மட்டுமே அவர்கள் அணியில் சொல்லிக் கொள்ளும்படியான பங்களிப்பைச் செய்துள்ளனர்.
FILE
பந்து வீச்சு பலமாக இருந்ததால் அந்த அணி நாக்பூரில் வெற்றி பெற்றது. இதனை தோனி முன்கூட்டியே உணர்ந்திருக்க வேண்டும். ஜாக் காலிஸ், ஹஷிம் அம்லா இருவருமே கடுமையான அழுத்தம் கொடுத்தால் விரைவில் பெவிலியன் திரும்பும் ஆட்டக்காரர்கள் என ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகள் நிரூபித்துள்ளன.
கள வியூகம் அமைப்பதில் எந்த இடத்தில் எந்த ஃபீல்டரை நிறுத்துவது என்பதும் ஒரு முக்கிய அம்சமாகும். நேற்றைய ஆட்டத்தில் ஸ்பின்னர்கள் வீசும் போது சச்சின் டெண்டுல்கர் ஸ்லிப் திசையில் நிற்கிறார். அந்த இடத்தில் அவர் ஒரு போதும் தன் வாழ் நாளில் சுழற்பந்து வீசும்போது நின்றதில்லை. அங்கு திராவிட் அல்லது லஷ்மண் அல்லது சேவாக்தான் நிற்பார்கள்.
இன்று நல்ல ஃபீல்டராக முரளி விஜயை அந்த இடத்தில் நிறுத்தலாம். ஆனால் சச்சினை தோனி ஏன் நிறுத்தினார் என்ற கேள்வியை வர்ணனையாளர்களான சுனில் கவாஸ்கரும் ரவி சாஸ்திரியும் எழுப்பினர். இது போன்று குருட்டாம்போக்கான சில உத்திகளை தோனி கையாள்கிறார்.
சுரேஷ் ரெய்னாவை கல்லியில் நிறுத்தி அவர் முக்கிய தருணத்தில் வெய்ன் பார்னெலுக்கு எளிதான கேட்சை கோட்டை விட்டார். விக்கெட் கீப்பராக இருந்து அனுபவம் பெற்ற தினேஷ் கார்த்திக்தான் எதிர்பாராது விளிம்பில் பட்டு வரும் பந்துகளை பிடிக்கத் தகுதியானவர். ஆனால் கார்த்திக்கை 3-வது ஸ்லிப்பில் நிறுத்துகிறார் தோனி.
3-வதாக ஒரு டெஸ்ட் போட்டி இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் ஜாகீர் கானும் தற்போது காயமடைந்துள்ள நிலையில் இந்திய அணி தோல்வியைக் கூட சந்தித்திருக்கலாம் என்ற நிலைதான் உள்ளது.
இதனையெல்லாம் சரி செய்வதுதான் பயிற்சியாளரின் வேலை. தோனி ஒரு கேப்டனாக ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங்கில் அபாரமாக விளையாடி வருகிறார் என்பதில் இருவேறு கருத்தில்லை. அவர் 13 டெஸ்ட் போட்டிகளில் சுமார் 1070 ரன்களைக் குவித்து 70 ரன்களுக்கும் மேலான சராசரியை வைத்துள்ளார்.
ஒரு நாள் தரவரிசையில் அவர் நீண்ட காலமாக நம்பர் 1 நிலையில் இருந்து தற்போது 2ஆம் இடத்தில் உள்ளார். எனவே கேப்டன் பொறுப்பு அவரது பேட்டிங் திறமையை பாதிக்கவில்லை. இந்த நிலையில் தலைமைப் பொறுப்பின் சில முக்கிய நுணுக்கங்களை அவர் இப்போது முதல் கற்றுக் கொண்டால் மேலும் சிறப்பான வெற்றிகளை அவரால் பெற்றுத்தர முடியும்.
ஆகவே நாம் முதல் டெஸ்ட் தோல்வியின் போது பதட்டமடைய வேண்டிய தோல்வி அல்ல என்றோம், அதே போல் இந்த வெற்றியையும் பெரிய அளவிற்கு கொண்டாட வேண்டிய வெற்றி அல்ல என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் இன்னொரு டெஸ்ட் இருந்திருந்தால் நம் பலவீனங்களை ஸ்மித் சரியாகப் பயன்படுத்தி தொடரை வெல்லும் உத்திகளை வகுத்திருப்பார்.
தேவை ஒரு ஆல்ரவுண்டர்
அணித் தலைவர்களுக்கு இன்று இருக்கும் மிகப்பெரிய தலைவலி அணிச் சேர்க்கையை எவ்வாறு தேர்வு செய்வது என்பதுதான். அதாவது 7 பேட்ஸ்மென்கள் 4 பந்து வீச்சாளர்களா அல்லது 6 பேட்ஸ்மென்கள் 5 பந்து வீச்சாளர்களா என்பதை எளிதில் தீர்மானம் செய்ய முடிவதில்லை.
இந்தப் பிரச்சனையை அணியில் ஒரு ஆல் ரவுண்டரை தேர்வு செய்துதான் தீர்க்க முடியும். இன்றைய நிலையில் ஆல்ரவுண்டர் தரத்திற்கு மூன்று வீரர்கள்தான் உள்ளனர்.
FILE
இர்பான் பத்தான், பிரவீண் குமார், அபிஷேக் நாயர். இதில் முதல் இருவர் பவுலிங் ஆல்ரவுண்டர்கள், மூன்றாமவர் பேட்டிங் ஆல்ரவுண்டர். இவர்களில் யாரேனும் ஒருவரை மாற்றி மாற்றி டெஸ்ட் அணியில் தேர்வு செய்து ஒருவர் அல்லது இருவரை வளர்த்து அந்த இடத்தை நிரப்பும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.
உதாரணமாக நாம் ஆஸ்ட்ரேலியாவை சுட்டலாம். கேமரூன் ஒயிட் ஒரு பவுலிங் ஆல்ரவுண்டராகத்தான் அணியில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் பந்து வீச்சில் அவர் சோபிக்கவில்லை என்பதால் இப்போது அவருக்கு பௌலிங்கே தருவதில்லை. பேட்டிங் மட்டும்தான் செய்கிறார். அந்த இடத்திற்கு தற்போது ஆஸ்ட்ரேலியா ஷேன் வாட்சன், ஜேம்ஸ் ஹோப்ஸ், மிட்செல் ஜான்சன் போன்றவர்களை உருவாக்கி வருகின்றனர்.
அதுபோல் இந்தியத் தேர்வுக் குழுவும் யோசிக்க வேண்டும்.
மொத்தத்தில் பயிற்சியாளர்கள் இந்திய அணியின் பலத்தில் அல்லாமல் பலவீனத்தில் தற்போது தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டிய நேரம் வந்துள்ளது. நம்பர் 1 இடத்தைப் பிடிக்க இந்திய அணி கடுமையாக போராடியுள்ளது, அந்த உழைப்பை நாம் மலினப்படுத்திவிட முடியாது.
அதே போல் அந்த இடத்தைத் தக்கவைக்க செறிவான தலைமைப் பொறுப்பை நோக்கி தோனியை பயிற்சியாளர்களும், மூத்த வீரர்களும், ஓய்வு பெற்ற வீரர்களும் நகர்த்திச் செல்வது அவசியம்.