யுவராஜுக்கு சிறையில் முதல் வகுப்பு ஒதுக்க முடியாது..! நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்..!!

Senthil Velan

சனி, 8 ஜூன் 2024 (14:07 IST)
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள யுவராஜுக்கு சிறையில் முதல் வகுப்பு ஒதுக்க முடியாது  சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
 
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு முதல் வகுப்பு சிறை ஒதுக்கக் கோரி அவரது மனைவி சுவிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 
 
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் உள்துறை சார்பில் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
 
அதில் முதல் வகுப்பு ஒதுக்கக்கோரி யுவராஜ் அளித்த மனுவை விதிகளுக்குட்பட்டு முறையாக பரிசீலித்ததாகவும், சமூகத்தில் யுவராஜ் செய்த குற்ற சம்பவங்களை கருத்தில் கொண்டு அவருக்கு முதல் வகுப்பு வழங்க கூடாது என சேலம் மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கொடும் குற்றம் புரிந்தவர்களுக்கு முதல் வகுப்பு ஒதுக்கக்கூடாது என சிறை விதிகள் உள்ளதால் தனக்கு முதல் வகுப்பு ஒதுக்க வேண்டுமென உரிமையாக யுவராஜ் கோர முடியாது என்பதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ALSO READ: என்னது ரூ.40 கோடி ஜிஎஸ்டி-யா? அதிர்ச்சியில் உறைந்த பெண் தொழிலாளி..! 
 
இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்